நீக்கப்படும் தேசத்துரோக சட்டம்.. கும்பல் கொலைக்கு இனி மரண தண்டனை - அமித்ஷா அதிரடி அறிவிப்பபு
டெல்லி: கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்து கொலை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். அதோடு தேசத்துரோக சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் பேசினார்.
இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளன. இதனை மாற்றம் செய்யும் வகையில் மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதன்படி இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கான மசோதா கடந்த ஆகஸ்ட் மாத கூட்டத்தொடரில் இருசபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 3 சட்ட மசோதாக்களும் லோக்சபாவில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சட்ட மசோதாக்கள் மீதான விவாதம் என்பது லோக்சபாவில் நடந்தது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று முக்கிய விஷயங்களை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதிய நியாய சன்ஹிதா மசோதா 2023, பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா மசோதா, 2023 மற்றும் பாரதிய சாக்சிய மசோதா 2023 உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்து கொல்லும் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒரு விதி இந்த புதிய மசோதாவில் உள்ளது.
மேலும் தேசத்துரோ சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திலக் மகாராஜ், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் உள்பட நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தனர். அப்போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட தேசத்துரோகச் சட்டம் இன்றுவரை தொடர்கிறது. தேசத் துரோகச் சட்டத்தை ஒழிக்க வேண்டும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசேதாக்கள் மூலம் தண்டனையை விட நீதியின் மீது அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது. மேலும் காவல்துறையின் பொறுப்புணர்வை இந்த மசோதாக்கள் அதிகப்படுத்தும். அதாவது கைது செய்யப்படும் நபர்கள் குறித்த விபரங்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் முறையாக பதிவு செய்ய வேண்டும். இதற்காக போலீஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க மசோதா வழிவகுக்கிறது. மேலும் இந்த புதிய சட்டங்களில் பயங்கரவாதம் குறித்த வரையறை என்பது சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை பயங்கரவாதத்துக்கான வரையறை இல்லாத நிலையில் இப்போது முதல் முறையாக அது இடம்பெற செய்யப்பட்டுள்ளது.
அதோடு விபத்து தொடர்பான வழக்குகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது விபத்தில் ஏற்படும் மரணம் மற்றும் அலட்சியத்தால் வாகனம் மோதி இறப்பு ஏற்படுவது என 2 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. விபத்து ஏற்படும்போது வாகன டிரைவர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தால் அவர்களுக்கான தண்டனை குறைவாக கிடைக்கும். மாறாக ஹிட் அண்ட் ரன் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிக தண்டனை என்பது வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications