மூன்று முடிச்சில் (முயற்சியில்) கோடீஸ்வரியான கல்யாண ராணி.. நகைக்கடை ஓனரால் கனவிலும் நினைக்காத பரிசு
டெல்லி: திருமணத்திற்கு பெண் தேடும் நன்கு வேலையில் உள்ள இளைஞர்கள், வசதியானர்களை குறிவைத்து திருமண இணையதளங்களில் மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி பலரையும் ஏமாற்றும் பெண்கள் மற்றும் திருமணம் செய்து பணம் நகையை சுருட்டிக்கொண்டு ஒடும் பெண்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் மூன்று இளைஞர்களை திருமணம் செய்து ரூ.1.25 கோடி சுருட்டிய சீமா அகர்வால் என்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவார்கள். ஆனால் இங்கு பல பேரின் திருமணங்கள் பணத்தாலும் அழகாலும் நிச்சயிக்கப்படுகிறது. அதுதான் வாழும் போதே சொர்க்கம் என்று நம்புவதால் அதைத்தான் மக்கள் முதன்மையாக பார்க்கிறார்கள். அப்படி பார்ப்பதால், பணத்தின பின்னால் போய் பாதாளத்தில் விழுந்தவர்கள் அதிகம். பணக்காரரை கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைத்து அழகான பல பெண்கள், ஏமாற்றுபவர்களிடம் சிக்கி விழுகிறார்கள். இதேபோல் பணக்கார இளைஞர்கள் அழகான பெண்களை திருமணம் செய்யும் ஆசையில் பணத்தை தொலைக்கிறார்கள். இரண்டுமே நடக்கிறது.

இதில் நாம் பார்க்க போவது இரண்டாவது ரகம். பெரிய நகைக்கடை உரிமையாளர்கள், ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர், வசதியான குடும்பத்தினைச் சேர்ந்தவர்களை அழகான பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஆசைகாட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் அதிக அளவில் உள்ளன. சில பெண்கள் கோடீஸ்வர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அப்படி செய்து இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார் சீமா. விவரமாக பார்ப்போம்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த பெரிய நகைக்கடை அதிபர், திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளார். அதற்காக திருமண இணையதளம் ஒன்றில் தனது சுயவிவரங்களை பதிவு செய்திருந்தார். இந்த இணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சீமா அகர்வால் என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். அந்த பெண்ணை பார்த்த உடன் நகைக்கடை அதிபருக்கு பிடித்து போனது. இருவரும் சமூக வலைதளங்கள், செல்போன் வாயிலாக காதலை வளர்த்துள்ளார்கள்.

சீமா அகர்வாலின் அழகு, இனிக்க இனிக்க பேசிய அவரது செயல்பாடுகளால் மயங்கிய நகைக்கடை உரிமையாளர், அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார். தனது குடும்பத்தினருடன் டேராடூன் சென்று மணமகள் வீட்டாரிடம் பேசியிருக்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் நகைக்கடை உரிமையாளருக்கும் சீமா அகர்வாலுக்கும் வெகுவிமரிசையாக கல்யாணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு சீமா அகர்வால் திடீரென காணாமல் போனார். வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.6.5 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை. இதனால் நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதனிடையே டேராடூன் திரும்பிய சீமா அகர்வால், உள்ளூர் போலீஸ் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் மீது புகார் அளித்தார். அதில், இயற்கைக்கு மாறான உடல் உறவு, வரதட்சிணை கேட்டு கணவர் தன்னை சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால் ஆடிப்போன நகைக்கடை உரிமையாளர், தனது தரப்பு நியாயத்தை முன்வைத்து ஜெய்ப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகார் குறித்து ஜெய்ப்பூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நகைக்கடை உரிமையாளர் கூறுவது உண்மை என்பதும் சீமா அகர்வால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் போலீஸார் அண்மையில் டேராடூனுக்கு சென்று சீமா அகர்வாலை கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசாரையே அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்தது.
இதுகுறித்து ஜெய்ப்பூர் மேற்கு துணை காவல் ஆணையர் அமித் குமார் கூறும் போது,"திருமண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீமா அகர்வால் இதுவரை 3 திருமணங்களை செய்திருக்கிறார் என்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். முதலில் சீமான அகர்வால், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு தொழிலதிபரின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் அவர் தலைமறைவாகியுள்ளார்.
பின்னர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டேராடூன் போலீஸ் நிலையத்தில் சீமா புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இயற்கைக்கு மாறான உடல் உறவில் கணவர் ஈடுபட்டதாக அவர் புகார் கூறியிருக்கிறார். ஆக்ரா தொழிலதிபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை வாபஸ் பெற ஆக்ரா தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை சீமா அகர்வால் மிரட்டி பெற்றுள்ளார். பின்னர் வேறுவழியில்லாமல் ஆக்ரா தொழிலதிபர் ஆஃபாகிவிட்டார்.
அதன்பின்னர் ஹரியானா மாநிலம் குர்காவ்ன் நகரை சேர்ந்த சாப்ட்வேட் என்ஜினியரை சீமா அகர்வால் திருமணம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு பிறகு 2-வது கணவரின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் அவர் தலைமறைவாகியிருக்கிறார். வழக்கம்போல டேராடூன் காவல் நிலையத்தில் 2-வது கணவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரிலும் கணவர் இயற்கைக்கு மாறான உடல் உறவுக்கு வற்புறுத்தினார். கணவரின் தம்பி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த வழக்கை வாபஸ் பெற குர்காவ்ன் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை சீமா பெற்றிருக்கிறார்

அதன்பிறகு தான் ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை சீமா 3-வதாக திருமணம் செய்துள்ளார். நகைக்கடை உரிமையாளரின் முதல் மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் மறுமணம் செய்து கொள்ள அவர் இணையத்தில் பதிவு செய்துள்ளார்.. இந்த விளம்பரத்தை பார்த்து சீமா அகர்வால், நகைக்கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
தற்போதைய விசாரணையில் சீமா அகர்வாலின் 3 திருமண மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் . முதல் கணவரிடம் ரூ.75 லட்சம், 2-வது கணவரிடம் ரூ.10 லட்சம், 3-வது கணவரிடம் இருந்து 30 லட்சம் மதிப்பு நகைகள், ரூ.6.5 லட்சம் ரொக்கத்தை சீமா அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மூன்று இளைஞர்களிடம் இருந்தும் அவர், சுமார் ரூ.1.25 கோடி பறித்திருப்பது எங்களுக்கு தெரியவந்துள்ளது. சீமாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று துணை காவல் ஆணையர் அமித் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications