ஆப்கானிஸ்தான் டூ இலங்கை.. ரூ.1,200 கோடி ஹெராயின்.. சினிமா பாணியில் சுத்துபோட்ட இந்திய அதிகாரிகள்
டெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் 1200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை இந்திய பெருங்கடலில் வைத்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமீப காலமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால், இதை தடுக்க கடலோர பாதுகாப்பு படையும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கவனமுடன் பணியாற்றி வருகின்றனர்.
அக்.15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடியாது.. நிரந்திர தீர்வே எங்கள் நோக்கம்.. அமைச்சர் கேஎன் நேரு!
200 கிலோ ஹெராயின் போதைப்பொருள்
அந்த வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பாகிஸ்தான் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1,200 கோடி மதிப்புமிக்க 200 கிலோ ஹெராயினை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 ஈரான் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தை முறியடித்து போதைப்பொருளை பறிமுதல் செய்தது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இந்தியாவில் விற்பனை செய்ய முயற்சி
ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு கடத்தல் கும்பலினர் 200 கிலோ ஹெராயினை பாகிஸ்தானுக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அந்த கும்பலினர் ஈரான் நாட்டு படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்துள்ளனர். இந்த ஹெராயினை இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்வது அவர்களின் திட்டமாக இருந்து இருக்கிறது. தண்ணீர் புகாத வகையில் 7 அடுக்குகள் கொண்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட இந்த ஹெராயின்களை இலங்கை படகில் மாற்ற திட்டமிட்டு இருந்தனர்.
கடலில் கொட்ட முயற்சித்தனர்
ஆனால், அதற்கு முன்பாக அந்த கும்பலினர் எங்களிடம் பிடிபட்டு விட்டனர். தப்பி ஓடிய இலங்கை படகையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால், அதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈரானிய ஷிப்பில் இருந்தவர்களும் கடலில் குதித்து தப்ப முயன்றனர். அதேபோல் ஹெராயினை கடலில் கொட்டவும் முயற்சித்தனர். எனினும் அதற்குள் பிடிபட்டு விட்டனர்.
'தேள்' படம் மற்றும் 'டிரகன்' சீல்
கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்களுடனும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட 200 பாக்கெட்டுகளில் சிலவற்றில் 'தேள்' படம் அச்சிடப்பட்டுள்ளது. சிலவற்றில் 'டிரகன்' சீல் அச்சிடப்பபட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன'' என்றனர். ஏற்கனவே மும்பை கடல் பகுதி அருகே 120 கோடி மதிப்புள்ள கடத்தல் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.