போச்சு.. தெலுங்கானா, ம.பி., மிசோரம் தேர்தலில் பாஜக அதோகதிதான்.. டெல்லி கூட்டத்தில் சொன்ன தலைவர்கள்?
டெல்லி: தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தொடர்பாக டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பாஜக பெரும் தோல்வியை எதிர்நோக்க வேண்டியது இருக்கும் என மூத்த தலைவர்கள் சிலர் பகிரங்கமாகவே எச்சரித்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அண்மைய சட்டசபை தேர்தல் முடிவுகள் பின்னடைவை வெளிப்படுத்தி இருக்கின்றன. இமாச்சல பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அடுத்தடுத்து பாஜக தோல்வியைத் தழுவியது. இதனால் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இப்போதே தயாராகி வருகிறது பாஜக. இதனால் டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பல மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் மாநிலத்தில் பாஜகவுக்கு தோல்விதான் கிடைக்கும் என மூத்த தலைவர்கள் பலர் வெளிப்படையாகவே தெரிவித்தனர். இதற்கான காரணங்களையும் அந்த தலைவர்கள் முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடித்த பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை சுனாமி போல வீசுகிறது. தெலுங்கானாவில் முன்னாள் பிஆர்எஸ் தலைவர் எடலா ராஜசேகர், பாஜகவில் சேர்ந்த பிறகு மிக மோசமான அதிருப்தி நிலவுகிறது. அவருக்கும் மாஜி மாநில தலைவர் பண்டி சஞ்சய் கோஷ்டிக்கும் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. மணிப்பூர் பிரச்சனையில் குக்கி-சோ பழங்குடிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துவிட்டதால் மிசோரமில் உள்ள மிசோ பழங்குடிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த காரணங்களால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான் ஏற்படும் எனவும் காரணங்களை பட்டியலிட்டுள்ளனர். ராஜஸ்தானிலும் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அலை, உட்கட்சி மோதல் இருந்தாலும் பாஜகவில் அதைவிட மிக மோசமான உட்கட்சி பூசல் இருப்பது வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துவிடும் சூழலை உருவாக்கும் எனவும் ஆதங்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் தேர்தலை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்பது தொடர்பாகவும் பாஜகவின் நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட விரும்புகிற வேட்பாளர்கள் குறித்து சர்வே நடத்துவது தொடர்பாகவும் பாஜக மேலிடத் தலைவர்கள் யோசனையை முன்வைத்தனர் என்கின்றன டெல்லி தகவல்கள். அத்துடன் உபி, பீகார், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் 5 மாநில சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான சர்வே நடத்துவது எனவும் விவாதிக்கப்பட்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications