விட்டமின்-எம்..வாஷிங் மெஷின்.. 417 பாஜக வேட்பாளர்களில் 116 பேர் யார் தெரியுமா? போட்டுடைத்த காங்கிரஸ்
டெல்லி: பணம், பழிவாங்கல் நடவடிக்கை உள்ளிட்ட மிரட்டல்கள் மூலமாக பாஜக எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கி உள்ளது எனவும், தற்போது பாஜக வேட்பாளர்கள் 417 பேரில் 116 பேர் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவுக்காக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக மூத்த தலைவரான அமைச்சர் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி: ராஜஸ்தானில் பேசிய பிரதமர்” 'அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டு வைக்காது." என பேசியிருந்தார்.
காங்கிரஸ் கண்டனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு 75 ஆண்டுகளில் எந்த பிரதமரும் பேசாதது என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,"பணபலம், பழிவாங்கும் அரசியல், அரசு ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலமாக ஜனநாயக அமைப்புகளின் மதிப்பை பாரதிய ஜனதா கட்சி குறைத்துவிட்டது.
அபிஷேக் மனு சிங்வி: கடந்த 10 ஆண்டுகளில் பிரதமராக இருந்த பிரதமர் மோடி தனது தவறான மற்றும் அவதூறான பேச்சுகள் மூலமாக அரசியல் அமைப்பு மற்றும் பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை குறைத்து விட்டார். தற்போது பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசி வருவதை கடந்த 75 ஆண்டுகளில் பேசிய எந்த பிரதமரின் பேச்சுடனும் ஒப்பிட முடியாது. மோடியின் இந்த பேச்சுகள் அந்த கட்சியின் அவநம்பிக்கையை தோல்வி பயத்தையே பிரதிபலிக்கிறது.
நியாயமானதல்ல: பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகளும் பிரச்சாரமும் நியாயமானதல்ல. கலாச்சாரத்தை சீரழிப்பது போல உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு எதிராக உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும் மேலும் பண பலத்தின் மூலமும் விசாரணை அமைப்புகளின் மிரட்டல் மூலமும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது.
வாஷிங் மெஷின்: பாஜக அறிவித்துள்ள 417 வேட்பாளர்களில் 116 பேர் வேறு வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். கடந்த காலங்களில் பாஜக குற்றம் சாட்டிய நபர்கள் தற்போது அந்த கட்சியின் வேட்பாளராக இருக்கின்றனர். காரணம், பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் வைத்திருக்கும் வாஷிங் மெஷின் அவர்கள் அனைவரையும் சுத்தமாக்கி விடும்” என மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications