ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் காந்தியின் 7 சம்பவங்கள்தான் காரணம்- சீனியர்கள் சீற்றம்!
டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவுவதற்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியே காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர்களே கொந்தளிப்பை வெளிப்படுத்துகின்றனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் தோல்விகளில் இருந்து ராகுல் காந்தி பாடம் கற்காமல் மூத்த மாநில தலைவர்களை மட்டுமே நம்பிக் கொண்டு சுதந்திரமாக அல்லது அலட்சியமாக இருந்துவிடும் ராகுல் காந்தியின் போக்கு மாறாமல் போனால் மகாராஷ்டிராவிலும் ஜார்க்கண்ட்டிலும் இதே கதிதான் காங்கிரஸுக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கின்றனர் மூத்த தலைவர்கள்.
ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்திருப்பது அக்கட்சியினருக்கு பேரதிர்ச்சியாக இருந்து வருகிறது. ஹரியானா தேர்தல் தோல்விக்கு பாஜகவையோ வாக்குப் பதிவு இயந்திரங்களை குறை கூறுவதை எல்லாம் நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் சுய பரிசோதனை செய்வதுதான் தற்போதைய தேவை என்பது காங்கிரஸ் சீனியர்களின் வாதம்.

அப்படி என்னதான் ஹரியானா தேர்தல் களத்தில் ராகுல் காந்தி தவறுகளை செய்தார்? ஏன் அவர் மீது மூத்த தலைவர்கள் பாய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு பல்வேறு சம்பவங்களை அடுக்குகின்றனர்.
சம்பவம் 1: ஹரியானா தேர்தல் பிரசாரத்தின் போது எப்படியும் ஜெயிப்போம் என்கிற அதீத நம்பிக்கையுடன் ராகுல் காந்தி பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. அத்துடன் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் போது திடீரென அமெரிக்காவுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டது அவர் மீதான நம்பிக்கையை வாக்காளர்களிடம் ஏற்படுத்தவில்லை.
சம்பவம் 2: ஹரியானா தேர்தல் களத்தை முற்று முழுதாக பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனிலை மட்டுமே நம்பி ஒப்படைத்திருந்தார் ராகுல் காந்தி. இதில் சுனில் ஒரு பக்கம், பூபிந்தர் சிங் ஹூடா இன்னொரு பக்கம் என ஆளுக்கு ஒரு பக்கம் மல்லுக்கட்டினர். ராகுல் ஆதரவு தமக்குதான் என்பதால் பூபிந்தர் சிங் ஹூடாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்தார் சுனில். ஆனால் பூபிந்தர் சிங் ஹூடா இதனை சகித்துக் கொள்ள மறுத்துவிட்டார்.
சம்பவம் 3: வேட்பாளர்கள் தேர்வில் சுனில் மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா இடையேதான் கடும் போட்டி. இதில் பூபிந்தர் ஹூடா கை ஓங்கியது. குமாரி செல்ஜா உள்ளிட்டோரை ஓரம் கட்டி தூக்கியடித்ததுதான் பூபிந்தர் சிங் ஹூடா, சுனிலின் பணியாக இருந்தது.
சம்பவம் 4: சுனிலைப் பொறுத்தவரை ராகுல் காந்தியிடம் 60 இடங்களில் வெல்வது உறுதி என நம்பிக்கை கொடுத்திருந்தார். சுனிலின் இந்த ஆரூடத்தை நம்பிதான் ராகுல் காந்தியும் வெளிநாட்டுக்கு போனார். அதேபோல தேர்தல் வியூக வகுப்பாளரான யோகேந்திர யாதவும் கண்டிப்பாக 60 இடங்கள் கிடைக்கும் என நம்பிக்கையூட்டி வைத்திருந்ததை அப்படியே அசால்ட்டாக ராகுல் ஏற்றுக் கொண்டார்.
சம்பவம் 5: சுனில், பூபிந்தர் சிங் ஹூடாவால் குமாரி செல்ஜா புறக்கணிக்கப்பட்டு 2 வாரம் தேர்தல் களத்துக்கே வராமல் இருந்தார்; இது தலித்துகளின் வாக்குகளை கடுமையாக பாதிக்கும் என்ற புரிதலே இல்லாமல் செல்ஜாவின் அதிருப்தியை கண்டு கொள்ளாமல் ராகுல் காந்தி வேடிக்கை பார்த்தார்
சம்பவம் 6: தேர்தல் பிரசாரங்களில் எப்போதும் போல சமூக நீதி, ஜாதிவாரி கணக்கெடுப்பு என பேசுகிற ராகுல் காந்தி தம்மைச் சுற்றி உயர் ஜாதியினரை மட்டுமே காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அனுமதிக்கின்ற போக்கு கட்சியின் ஓபிசி மற்றும் தலித் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ஹரியானா ஓபிசி, தலித் தலைவர்களும் ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவே செய்தனர்.
சம்பவம் 7: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைய கமல்நாத், அசோக் கெலாட், பூபேஷ் பாகல்தான் காரணம் என நன்றாகவே தெரியும். இத்தனை தோல்விகளுக்கு பின்னராவது ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடாவை விட தம்மை ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தி இருந்திருக்கலாம். அதையும் ராகுல் காந்தி செய்யவில்லை. ராகுல் காந்தியின் இத்தகைய போக்குகள் மாறாமல் நீடித்தால் மகாராஷ்டிராவிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஹரியானா கதிதான் காங்கிரஸுக்கு என கதறுகின்றனர் கதர் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications