பட்ஜெட்டில் புறக்கணிப்பு: ‘தென்னிந்தியா தனிநாடு’ கோரிக்கை காங்கிரஸின் கொள்கை அல்ல: ப.சிதம்பரம்
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதால் தென்னிந்தியா மாநிலங்கள் தனிநாடு கேட்கும் என்பது காங்கிரஸின் கொள்கை அல்ல என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காது என்பதால் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் திமுக எம்பிக்கள் கறுப்பு சின்னம் அணிந்து நாடாளுமன்ற வளாகம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவர் என அறிவித்தார்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், இந்தி பேசும் இந்தி பெல்ட் மாநிலங்கள்தான் இந்தியாவா? கர்நாடகா பெருமளவு வரி வசூல் செய்தும் தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என குமுறி இருந்தார்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் எம்பி, இந்தி பேசும் மாநிலங்களுக்கு தென்னிந்திய மாநிலங்களின் வரி வருவாய் அள்ளிக் கொடுக்கப்படுகிறது. இத்தகைய பாரபட்சம் நீடிக்கும் போது இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோரும் நிலைமை உருவாகும் என எச்சரித்திருந்தார்.
காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டிகே சுரேஷ் எம்பியின் கருத்து தேசதுரோக செயல் எனவும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், இது காங்கிரஸின் கொள்கை அல்ல. காங்கிரஸ் கட்சி, தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனிநாடு கோரவில்லை. இது காங்கிரஸ் கொள்கையும் அல்ல. இது தொடர்பாக டிகே சுரேஷிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications