கோயில்களுக்கு 10% வரி.. கர்நாடக அரசின் புதிய சட்டம் மேலவையில் தோல்வி.. சித்தராமையாவுக்கு அதிர்ச்சி
பெங்களூர்: இந்து கோயில்களுக்கு வரி விதிக்கும் மசோதாவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கர்நாடக மேல் சபையில் அரசு கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதா தோல்வி அடைந்தது.
கர்நாடகாவில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அம்மாநில முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து அங்கே சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.அதன்படி கர்நாடகா சட்டசபையில் புதன்கிழமை 'கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024' நிறைவேற்றப்பட்டது.

இதில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதத்தையும், ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் தார்மிக பரிஷத்துக்கு வழங்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்று இருந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கோவில் வருவாயை வேறு நோக்கங்களுக்கு அரசு பயன்படுத்துவதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து வந்தது.
இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் நேற்று அமைச்சர் ராமலிங்கரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது. இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேல்சபையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. மசோதா தோல்வி அடைந்ததும் பாஜக உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேல்சபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்ந்துள்ள மசோதா தோல்வி அடைந்தது சித்தரமையாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications