பிரதமரின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ்! ஓய்வு பெற்ற 3வது மாதத்தில் புதிய பதவி! பின்னணி என்ன?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தில் தொழில்துறை செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், 3 மாதத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்து பார்க்கலாம்..
கடந்த 40 ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணியாற்றி வந்தவர் சக்தி காந்த தாஸ். நிதித்துறை, வரித்துறை, தொழில்துறை, உள்கட்டமைப்பு ஆகிய பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது முதன்மைச் செயலாளராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை அமைச்சரவை நியமன குழு செயலாளர் மனிஷா வெளியிட்டு இருக்கிறார். பிரதமரின் பதவிக்காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் அந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் தலைவராக செயல்பட்டு வந்த பிவிஆர் சுப்பிரமணியத்தின் பதவிக்காலமும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு பேட்ஜ் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸ் இந்தியாவின் மிக முக்கிய நிர்வாக அதிகாரிகளில் ஒருவர். சென்னை பல்கலைக் கழகத்தில் வரலாற்றிலும் அரசியல் துறையிலும் பட்டம் பெற்ற அவர் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். ஏற்கனவே குறிப்பிட்டது போல மத்திய அரசு பணியிலும் மாநில அரசு பணியிலும் நிதித் துறை, வரித் துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை முக்கிய பொறுப்பு வகித்துள்ளார்.
மத்திய நிதித் துறை செயலாளராகவும் தமிழ்நாடு தொழில் துறை செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது, முக்கிய பொருளாதார மாற்றங்கள் ஆகியவை அவரது காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படுத்தப்பட்டன. சிறந்த நிர்வாகத்துடன், நிதி குறித்த முன்னோக்கிய சிந்தனைகள் மற்றும் சிறப்பான பணி ஆகியவை காரணமாக இந்த பணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா இணக்கமான செயல்பாட்டை மேற்கொண்டு இருந்தாலும் வரும் காலங்களில் டாலருக்கு மாற்றான புதிய கரன்சி, பிரிக்ஸ் கூட்டமைப்பில் பொது நாணயம் உள்ளிட்ட தனி விவகாரங்களுக்காக சக்தி காந்த தாஸ் இந்த புதிய பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications