இந்தியாவில் இருந்து வெளியேறிய ஹசீனா டீம்.. ஏன் இந்த திடீர் முடிவு? அடுத்த பிளான் என்ன.. பரபர தகவல்
டெல்லி: முன்னாள் வங்கதேச பிரதமர் ஹசீனா இப்போது டெல்லி அருகே தான் தங்கியுள்ளார். வங்கதேசத்தில் மிக மோசமான சூழல் நிலவுவதால் அவரால் அங்குச் செல்ல முடியாத சூழலே நிலவுகிறது. இந்தச் சூழலில் ஹசீனாவுடன் இந்தியா வந்த டீம் திடீரென இந்தியாவில் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய மாணவர் போராட்டம் மெல்ல அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாறியது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.

ஒரு கட்டத்தில் அழுத்தம் அதிகரித்ததால் வேறு வழியின்றி தனது பிரதமர் பதவியை ஹசீனா ராஜினாமா செய்தார். அவரது இல்லத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
வெளிநாடு: இதற்கிடையே முன்னாள் வங்கதேச பிரதமர் ஹசீனாவுடன் இந்தியாவுக்கு வந்த டீமில் இருந்த சிலர் இப்போது வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அவர்கள் எந்த நாட்டிற்குச் சென்றுள்ளனர். எதற்காகச் சென்றுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஷேக் ஹசீனா, தனது சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் அவர்களின் நெருங்கிய டீமுடன் கடந்த திங்கள்கிழமை ராணுவ விமானத்தில் இந்தியா வந்தடைந்தார். அவர் டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கினார். அவர் இப்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
எதற்காக: ஹசீனா இப்போது எங்குப் புகலிடம் கோரலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹசீனா டீமில் இருந்தவர்கள் திடீரென இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் எதற்காக திடீரென வெளிநாட்டிற்குக் கிளம்பியுள்ளனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும் புகலிடம் தொடர்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டதால் ஹசீனாவும் அவரது டீமும் அவசர அவசரமாக வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. கிளம்ப வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் கூடுதல் ஆடைகள் மற்றும் தினசரி தேவையான பொருட்கள் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு வீரர்கள்: இதனால் ஹசீனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள இந்திய அதிகாரிகளே அவர்கள் தினசரி தேவையான பொருட்களை வாங்க உதவினார்கள் என்று கூறப்படுகிறது. ஹாசீனா வேறு ஒரு நாட்டிற்குச் செல்லும் வரை மட்டுமே இந்தியா அவருக்குப் புகலிடம் தரும் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்திய வீரர்களும் ஹசீனாவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த நாளே தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனா மற்றும் அவரது டீமை சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது ஹசீனா தனது திட்டங்கள் குறித்து விளக்கியதாகக் கூறப்படுகிறது.
அடுத்து என்ன: ஹசீனா முதலில் பிரிட்டன் நாட்டில் தான் அடைக்கலம் கோரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அடைக்கலம் கோருவதற்கு என்று மட்டுமே ஒருவர் பிரிட்டன் நாட்டில் நுழையும் வகையில் எந்தவொரு சட்டமும் இல்லை. இதனால் பிரிட்டன் அவரது அடைக்கல கோரிக்கையை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பின்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் அடைக்கலம் கோருவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications