சபாஷ்.. டெல்லி மேயராக ஆம் ஆத்மி ஷெல்லி ஓபராய் தேர்வு.. 15 வருடத்துக்கு பின் பதவியை பறிகொடுத்த பாஜக
உச்சநீதிமன்றம் நியமன கவுன்சிலருக்கு வாக்குரிமை கிடையாது என்று திட்டவட்டமாக கூறியது.
டெல்லி: டெல்லி மேயர் தேர்தல் மூன்று முறை அமளியில் நடத்த முடியாமல் நின்ற நிலையில் தற்போது உச்சநீதிமன்ற தலையீடுக்கு பின்னர் நான்காவது முறை அவை அமைதியான முறையில் கூடி புதிய மேயரை தேர்ந்தெடுத்துள்ளது. ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் புதிய மேயராக தேர்வாகியுள்ளார்.

டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த டிசம்பரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இதனையடுத்து ஆம் ஆத்மி வேட்பாளர் டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 முறையும் மாநகராட்சி தேர்தல் நடைபெறாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் முதல் அவை கூட்டத்தில் புதிய மேயர், துணை மேயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக மேயர் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் அலுவலராகவும், தற்காலிக அவைத் தலைவராகவும் டெல்லி துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட சத்ய சர்மா தங்களை கேட்காமல் 10 நியமன கவுன்சிலர்களை நியமித்ததாகவும், மட்டுமல்லாது அவர்களுக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருப்பதாகவும் அறிவித்துள்ளார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
சட்டவிதிகளுக்கு உட்பட்டே இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன என பாஜக கூறியது. இருவரின் கருத்து மோதல்களால் மாநகராட்சி அவை முற்றிலுமாக முடிங்கிப்போனது. இதனையடுத்து ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தற்காலிக அவைத்தலைவரின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம் நியமன கவுன்சிலருக்கு வாக்குரிமை கிடையாது என்று திட்டவட்டமாக கூறியதுடன் தேர்தல் நடத்தும் தேதியை 24 மணி நேரத்திற்குள் இறுதி செய்யுமாறு கடந்த 17ம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் 22ம் தேதி (இன்று) நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே மூன்று முறை தேர்தல் நடத்தும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நான்காவது முறையும் இன்று அவை கூட உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திட்மிட்டது போல் தேர்தல் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தேர்தலில் 250 கவுன்சிலர்கள், டெல்லியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 7 எம்.பிக்கள், மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பிக்கள் மற்றும் 14 எம்எல்ஏக்கள் என மொத்தம் 274 பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் 241 பேர் மட்டுமே வாக்களித்தார்கள். வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று டெல்லியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஆம் ஆத்மி 134 வார்டுகளிலும், பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications