சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்.. சிறையில் இருக்கும் கணவருக்காக ட்விட்டரில் உருக்கமான பதிவு
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறி சிறையில் இருக்கும் தனது கணவருக்காக மிகவும் உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1988 ஆம் ஆண்டு பாட்டியாலா பகுதியில் கார் நிறுத்துவது தொடர்பாக ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சித்தும் அவரது நண்பரும் வாக்குவாதம் செய்த நபரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, இதில் வாக்கு வாதம் செய்த 65-வயது முதியவரும் உயிரிழந்தார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை
இது தொடர்பான வழக்கில் சித்துவிற்கு ஹரியானா நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்துவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததுடன் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உருக்கமான ட்விட் பதிவு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாட்டியாலா நகரில் உள்ள சிறையில் சித்து அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து, தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் இதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

செய்யாத ஒரு குற்றத்திற்காக
சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தனது ட்விட்டரில் பதிவில் உருக்கமாக எழுதியிருப்பதாவது:- செய்யாத ஒரு குற்றத்திற்காக அவர் சிறையில் இருக்கிறார். தொடர்புடைய அனைவரையும் மன்னியுங்கள். உங்களுக்காக வெளியில் அனுதினமும் காத்துக் கொண்டு இருக்கிறேன். சொல்லப்போனால் உங்களை விட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். வழக்கம் போல் உங்கள் வலிகளை போக்க முயற்சித்து அதை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது
உங்களை பார்ப்பதற்காக காத்துகொண்டு இருக்கிறேன். நீதி மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகிறது. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அது மீண்டும் மீண்டும் நம்மை சோதிக்கும். மன்னிதுவிடுங்கள்.. உங்களுக்காக காத்திருக்க முடியாது. ஏனெனில் புற்றுநோய் (stage 2 invasive cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. யாரையும் குறை கூற முடியாது. ஏனெனில் இது கடவுளின் திட்டம்.. சிறந்தது" என்று பதிவிட்டுள்ளர்.












Click it and Unblock the Notifications