கொரோனா தடுப்பு மருந்திற்கு இன்று அனுமதி... 3 நிறுவனங்களில் யாருக்கு அனுமதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசை தடுக்க தடுப்பு மருந்தே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் ஆகியவை தங்கள் தடுப்பு மருந்துகளின் மூன்று கட்ட மருத்துவ சோதனைகளை முழுவதுமாக முடித்துள்ளன. இந்த தடுப்பு மருந்துகளுக்கு பல்வேறு நாடுகளும் அனுமதியளித்து வருகின்றன.
அதேபோல இந்தியாவிலும் தங்கள் தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஃபைசர், சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
ஆலோசனை
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அனுமதி அளிப்பது குறித்து மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஸ்கோ) நிபுணர் குழுவின் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏதேனும் ஒரு தடுப்பு மருந்திற்காவது இன்று அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேற்று சீரம் மற்றும் பாரத் பயோடெக் தனது தடுப்பு மருந்து குறித்துச் சமர்ப்பித்த கூடுதல் தகவல்களை வல்லுநர் குழு ஆய்வு செய்தது.
முதலில் யாருக்கு அனுமதி
தடுப்பு மருந்து ஆய்வு முடிவுகள் குறித்த கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்குமாறு ஃபைசர் நிறுவனத்திடம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு கேட்டுக்கொண்டிருந்தது. இருப்பினும், ஃபைசர் இன்னும் அதன் ஆய்வு முடிவுகளை அளிக்கவில்லை. அதேபோல பாரத் பயோடெக் இன்னும் மூன்றாம்கட்ட சோதனைகளை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தாக ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்திற்கே இன்று ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரம்
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் உரிமை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் செலவு குறைவு. அதேபோல இதைச் சாதாரண பிரிட்ஜில்கூட சேமித்து வைக்கலாம் என்பதால் பல உலக நாடுகள் இந்தத் தடுப்பு மருந்தையே பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பு மருந்து ஒத்திகை
இந்தியாவில் தடுப்பு மருந்து வழங்குவது குறித்த முதல் ஒத்திகை கடந்த டிசம்பர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நான்கு மாநிலங்களில் நடைபெற்றது. இதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்நிலையில், அதேபோல இரண்டாவது ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் வரும் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த ஒத்திகை குறித்து டெல்லி அரசுடன் வரும் ஜனவரி 2ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மறு ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.
தேர்தலும் இதுவும் ஒன்றே
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், "ஒவ்வொரு தேர்தல்களின் போதும், நாம் எப்படித் தேர்தல் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோமோ, அதேபோல இதிலும் அனைத்து மருத்துவக் குழு உறுப்பினருக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். முதலில் தேசிய அளவில் 2,000க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாக்குச்சாவடியில் உள்ள அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் அதே முறைதான் இதில் பின்பற்றப்படுகிறது" என்றார்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பு 1.02 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.49 லட்சத்தைத் தொட்டுள்ளது.