ராஜ்யசபா:அமைச்சர் கையில் இருந்து அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணாமுல் எம்.பி சாந்தனுசென் சஸ்பெண்ட்
டெல்லி: ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பான அறிக்கையை பிடுங்கி கிழித்து சுக்கு நூறாக கிழித்து எறிந்து காற்றில் பறக்கவிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனுசென் நடப்பு நாடாளுமன்ற குழுத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர் என பல நூறு பேர் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியும் வருகின்றன.

அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
இந்த நிலையில் ராஜ்யசபாவில் நேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து விளக்கம் அளித்து கொண்டிருந்தார். பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அமைச்சரின் அறிக்கை பிடுங்கி கிழிப்பு
இதனால் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனுசென், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி சுக்கு நூறாக கிழித்து ராஜ்யசபாவில் பறக்கவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திரிணாமுல் எம்.பி. சாந்தனுசென்னுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சஸ்பெண்ட் தீர்மானம்
இந்த நிலையில் இன்று காலை ராஜ்யசபா தொடங்கியதும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி. முரளிதரன், எம்.பி. சாந்தனுசென்னை சஸ்பெண்ட் செய்ய கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு, ராஜ்யசபாவில் இருந்து சாந்தனு சென் விலகி சபையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது மற்றொரு திரிணாமுல் எம்.பி. டெரெக் ஓ பிரெய்ன் நேற்றைய சம்பவம் தொடர்பாக பேசினார்.

சாந்தனு சென் சஸ்பெண்ட்
இதன் பின்னர் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் சாந்தனு சென்னை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபையை விட்டு வெளியேறுமாறு சாந்தனுசென்னை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

வெங்கையா நாயுடுவிடம் வலியுறுத்தல்
மேலும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்தான், திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென்னை மிரட்டினார் என்று அக்கட்சியின் எம்.பி. சுகேந்து சேகர் ரே குற்றம்சாட்டினார். ஆனால் இதனை நிராகரித்த ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, சபை கூட்டம் முடிந்த பின்னர்தான் நீங்கள் சொன்ன நிகழ்வு நடந்தது என்று சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா, திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து சாந்தனு சஸ்பெண்ட் விவகாரம் குறித்து பேசினர். இந்நிலையில் ராஜ்யசபா நடவடிக்கைகள் வரும் திங்கள்கிழமை முற்பகல் 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications