EMI கூட செலுத்த முடியவில்லை.. அதிக சம்பள ஆசையால் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கதி.. இப்போது ரேபிடோ ஓட்டுகிறார்.. சோகம்
டெல்லி: ஐடி நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கி வந்த இன்ஜினியர் ஊதிய உயர்வுடன் இன்னொரு நிறுவனத்தில் பணியாற்ற திடீரென்று தனது பணியை ராஜினாமா செய்தார். ஆனால் அவருக்கு புதிய வேலை கிடைக்கவில்லை. மேலும் ஐடி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் இஎம்ஐ செலுத்துவதற்காக அவர் ரேபிடோ ஓட்ட தொடங்கி உள்ளனர்.
தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. செலவை குறைக்கிறோம், ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரிக்கிறோம் எனக்கூறி ஊழிர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் ஐடி ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

இப்படியான சூழலில் தான் ஊதிய உயர்வுடன் இன்னொரு ஐடி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்து வேலையை ராஜினாமா செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் தற்போது பெரிய சிக்கலில் மாட்டி உள்ளார். குடும்பத்துடன் வசித்து வந்த பிளாட்டை காலி செய்த அவர் இஎம்ஐ செலுத்துவதற்காக தற்போது ரேபிடோ ஓட்டி வருகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் நோமடிக் தேஜூ. இவர் நொய்டாவில் உள்ள கவுர் சிட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ள இடத்தில் நின்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஐடி துறை பணியை ராஜினாமா செய்து சென்ற தனது நண்பர் தற்போது இஎம்ஐ செலுத்துவதற்காக ரேபிடோ ஓட்டுவதாக கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி நோமடிக் தேஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
‛‛நான் நிற்கும் இந்த இடத்தில் ஒரு பிளாட்டின் விலை ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடியாக உள்ளது. வாடகை என்று பார்த்தால் மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரமாக உள்ளது. எனது நண்பர் ஒருவர் தனது குடும்பத்துடன் இந்த குடியிருப்பில் வசித்து வந்தார். ஆனால் அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து அவர் ராஜினாமா செய்தார். ஆனால் அந்த சமயத்தில் ஐடி துறையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறைய தொடங்கியது.
இதனால் எனது நண்பருக்கு பணி கிடைக்கவில்லை. தற்போது அவர் இந்த குடியிருப்பை காலி செய்துவிட்டார். தனியாக இன்னொரு இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தற்போதும் எனது நண்பர் இஎம்ஐ செலுத்த வேண்டி உள்ளது. வேலை இன்றி, நிரந்தர வருமானம் இன்றி உள்ள அவருக்கு அது சிரமமாக உள்ளது. இதனால் அவர் ரேபிடோ ஓட்டி வருகிறார். சில நேரங்களில் பிரிலேன்ஸ் முறையில் ஐடி பணிகளையும் செய்து கொடுக்கிறார்'' என்று கூறி கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோ தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி ஒருவர், ‛‛ஏஐ பயன்பாட்டால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடக்கம் தான். மக்கள் இப்போது தான் இந்த பிரச்சனையை பற்றி அறிந்து கொள்ள தொடங்கி உள்ளனர். ஏராளமானவர்கள் பணியை இழந்துள்னர்.
எதிர்காலத்தில் இன்னும் நிறையபேர் பணியை இழக்க உள்ளனர். இது சமூகத்தில் பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தும்'' என்று கூறியுள்ளார். அதாவது ஐடி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு காரணமாக தற்போது ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும், புது ஆட்களை பணிக்கு எடுக்காத நிலையும் உள்ளது. அதனை தான் அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், இன்னொருவர், ‛‛இந்தியாவில் இது பெரிய சவாலான காரியமாகும். பொருளாதாரம் வெறும் எண்ணளவில் நன்றாக உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் வேறு விதமாக உள்ளது. நிறைய மக்கள் வேலையை இழக்கின்றனர். நல்ல பிளான் இருக்கும் பட்சத்தில் வெளிநாடு செல்ல யோசிக்க வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications