Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோமாலிலாந்து..புதிய முஸ்லிம் நாட்டை ஏற்குமா இந்தியா? ‛நோ’ சொன்ன வெளியுறவு துறை - பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1991ம் ஆண்டில் இருந்தே சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமலிலாந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது. ஆனால் உலக நாடுகள் அதனை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. முதல் முதலாக இஸ்ரேல் சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் உள்பட 30க்கும் அதிகமான இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு அடுத்ததாக சோமாலிலாந்தை இந்தியா தான் அங்கீகரிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி முக்கிய விவரம் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடாக சோமாலியா உள்ளது. இது இஸ்லாமியா நாடாகும். இங்கு சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இது ஏழை நாடாகும். இங்கு பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

somaliland-is-after-israel-india-likely-to-recognise-this-new-state-detail-here

உள்நாட்டு போர், வறட்சி உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் உணவு, தண்ணீர் இன்றி பலியாகி வருகின்றனர். மேலும் குழந்தைகள் ஊட்டசத்து இன்றி தவித்து வருகின்றனர். சோமாலியாவின் ஒரு புறம் இந்திய பெருங்கடல் உள்ளது. இன்னொரு புறம் செங்கடல் உள்ளது.

இதனால் சோமாலியா மிவும் முக்கிய பகுதியாக உள்ளது. சர்வதேச கப்பல் வர்த்தகம் சோமாலியாவை சுற்றி நடக்கிறது. இதனை பயன்படுத்தி தான் சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் அதிகம் உள்ளனர். நாட்டில் நிலவும் பிரச்சனையால் பலரும் கப்பல்களில் கொள்ளையடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

இப்படியான சூழலில் தான் சோமாலியாவின் ஒரு பகுதியாக இருந்த சோமாலிலாந்து தனி நாடு கோரியது. சோமாலிலாந்து ஏடன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இது செங்கடல் பகுதியாகும். இதனால் சோமாலியா, சோமாலிலாந்துக்கு தனி நாடு கோரிக்கையை மறுத்தது. இருப்பினும் உள்நாட்டு பிரச்சனை உள்பட பல போராட்டங்களை தொடர்ந்து சோமாலியாவில் இருந்து பிரிந்து சோமலிலாந்து சுதந்திரத்தை அறிவித்து கொண்டு 1991 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.

சோமாலிலாந்திலும் சன்னி இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளன. கடந்த 2024ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 62 லட்சமாக உள்ளது. சோமாலிலாந்தின் தலைநகராக ஹெர்கெய்ஸா உள்ளது. சோமாலியா வறுமையில் சிக்கி தவித்தாலும் கூட சோமாலிலாந்து மக்கள் பிரச்சனையின்றி வாழ்ந்து வருருகின்றனர். அதிபராக அப்திர் ரஹ்மான் முகமது அப்துல்லாஹி உள்ளார். இருப்பினும் சோமாலிலாந்தை யாரும் இன்னும் தனி நாடாக அங்கீகரிக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தான் சோமாலிலாந்தை முதல் நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சோமாலிலாந்தின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், கல்வி, மருத்துவம், விவசாயத்துக்கும் உதவுவதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இஸ்ரேல் என்பது யூதர்களின் நாடாகும். சோமாலிலாந்து சன்னி இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள நிலையில் நெதன்யாகுவின் இந்த நடவடிக்கை பேசும் பொருளாகி உள்ளது.

இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்கள் மீது மத்திய கிழக்கு நாடான ஏமனில் செயல்படும் ஹவுதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்க சோமாலிலாந்தை பயன்படுத்த நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சோமாலிலாந்தும், ஏமனும் பக்கத்து பக்கத்து நாடுகள். இருநாடுகளுக்கு இடையே கடல் தான் உள்ளது. இதனால் சோமாலிலாந்தை நாடாக அங்கீகரித்து அங்கு ராணுவம் அல்லது விமான தளத்தை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் தான் பல நாடுகளும் இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்த்து வருகின்றனர். பாகிஸ்தான் உள்பட பல இஸ்லாமிய நாடுகளும் சோமாலிலாந்தை இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரித்ததை ஏற்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. அதாவது இஸ்ரேலை தொடர்ந்து சோமாலிலாந்தை தனி நாடாக இந்தியா ஏற்க வாய்ப்புள்ளதாக இணையதளங்களில் செய்திகள் பரவுகிறது.

அதுமட்டுமின்றி சோமாலியாவுக்கான இந்தியத் தூதர் சோமாலிலாந்திற்கு தப்பித்து சென்றுவிட்டதாகவும், இதனால் அவரை சோமாலியா அதிபர் இடைக்நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது போதாது என்று 'இன்சைட் ஆப்பிரிக்கா' எனும் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், ‛‛சோமாலிலாந்தை அங்கீகரிக்க வாய்ப்புள்ள இன்னொரு நாடு இந்தியா. இந்தியா விரைவில் சோமாலிலாந்துக்கு அங்கீகாரம் வழங்கும்.

ஏனென்றால் இந்தியா, தனது போட்டியாளராக சீனாவுடன் பின்தங்கிவிடக்கூடாது என்பதில் ஆர்வமாக உள்ளது. சோமாலிலாந்து தனது பெர்பெரா துறைமுக வர்த்தக வழித்தடம் மற்றும் ஆப்பிரிக்காவின் கொம்பில் உள்ள மிகப்பெரிய சந்தையான எத்தியோப்பியாவிற்கான அணுகலை இந்தியாவுக்கு வழங்கலாம். இது இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக பல நன்மைகளை வழங்கலாம்'' என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் Fact Check சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛இன்சைட் ஆப்பிரிக்கா' பக்கத்தில் பதிவை பகிர்ந்து, ‛‛பின்வரும் பதிவு தவறானது. தயவுசெய்து கவனமாக இருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் போல் சோமாலிலாந்தை தனிநாடாக இந்தியா அங்கீரிக்கும் முடிவில் இல்லை என்பதை வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+