பஞ்சாப்பில் கற்ற பாடம்.. இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர்களை அழைத்த சோனியா காந்தி.. முக்கிய அட்வைஸ்
டெல்லி: இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அம்மாநில தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். ‛‛இமாச்சல் பிரதேசத்தில் பஞ்சாப் நிலை வேண்டாம். ஒற்றுமையா செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்'' என அறிவுரை வழங்கினார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை ஆம்ஆத்மி தட்டி பறித்தது. மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் கட்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தனர். ஜி23 எனும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தேர்தல் தோல்வி குறித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை விமர்சித்தனர்.

காங்கிரஸ் நடவடிக்கை
இதையடுத்து தற்போது காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். இதனால் தான் அதிருப்தி தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் 5 மாநில தேர்தல் தோல்வியை காங்கிரஸ் கட்சியை வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலை நீடித்தால் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக இல்லாத நிலை உருவாகலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால் கட்சி தலைவர்களை ஊக்கப்படுத்தி தேர்தல் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

இமாச்சல் தலைவர்களுடன்
இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். 68 சட்டசபை தொகுதிகள் உள்ள இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில் இமாச்சல் பிரதேச பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, அம்மாநில தலைவர்கள் பங்கேற்றனர்.

கடிந்து கொண்ட சோனியா
அப்போது சோனியா காந்தி பேசுகையில், ‛‛நீங்கள் அனைவரும் தற்போது ஒன்றாக அமர்ந்துள்ளீர்கள். ஆனால் மற்றபடி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை. இது முரண்பாட்டை முதலில் கைவிடுங்கள். அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்ளுங்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்'' என கடிந்து கொண்டதோடு, அறிவுரையும் வழங்கினார்.

ஆம்ஆத்மி குறித்து விவாதம்
மேலும் இமாச்சலில் ஆம்ஆத்மி கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் ஆம்ஆம்மியின் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அந்த கட்சியின் செயல்பாடு குறித்த விபரங்களை சோனியா காந்தி கேட்டு கொண்டார். அப்போது, மாநில பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‛‛இமாச்சல் பிரதேசத்தில் ஆம்ஆத்மி கட்சி பிரச்சனை இல்லை. காங்கிரஸ், பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் தான் ஆம்ஆத்மியில் சேர்ந்து போட்டியிடுவார்கள்'' என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பஞ்சாப் நிலை வராது
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அனைத்து தலைவர்களும், ‛நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணி செய்வோம். பஞ்சாப் போன்ற நிலையை இமாச்சல் பிரதேசத்தில் கொண்டு வர மாட்டோம். மேலும் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்' என உறுதியளித்தனர்.

இடைத்தேர்தலில் காங்கிரஸ்
இமாச்சல் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மாண்டி மக்களவை தொகுதி, 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது காங்கிரஸ் செல்வாக்கை நிரூபிக்கிறது. இதை அப்படியே பயன்படுத்தி மீண்டும் இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் மேலிடம் முடி்வு செய்துள்ளது. இருப்பினும் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான விர்பத்ரா சிங் சமீபத்தில் இறந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications