தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்... நல்ல செய்தி சொன்ன இந்திய வானிலை மையம்
தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை முதல் கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை இயல்பாகவே இருக்கும் என்றும் கணித்துள்ளது.
டெல்லி: நடப்பாண்டு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் தென் இந்தியாவில் மழைப் பொழிவு 93 சதவிகிதம் முதல் 107 சதவிகிதம் வரை என இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. வரும் வியாழக்கிழமை முதல் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். ஜூன் முதல்நாளில் தென்மேற்குப் பருவமழை வழக்கம் போல தொடங்கி விடும்.
நடப்பாண்டு இரண்டு நாட்கள் தாமதமாக ஜூன் 3 முதல் மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று கேரளாவில் வலுவடைந்துள்ளது.
இந்தியாவில், நடப்பாண்டு பருவமழைகள் இயல்பாகவே இருக்கும். அதிகப்படியான மழைப் பொழிவை பருவமழைகள் தராது என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் மழைப் பொழிவு 92 சதவிகிதம் முதல் 108 சதவிகிதம் வரை என இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென் இந்தியாவில் மழைப் பொழிவு 93 சதவிகிதம் முதல் 107 சதவகிதம் வரை என இயல்பாக இருக்கும். அதே சமயம், மத்திய இந்தியாவில், இயல்பானதை விட 106 சதவீதம் அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 95 சதவிகிதம் என இயல்புக்குக் குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மானாவாரி விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் பெரும்பாலும் இயல்பை விட அதிகமான அளவு மழைப்பொழிவு இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications