தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும்...விளைச்சல் அதிகரிக்கும் - நல்ல செய்தி சொன்ன இந்திய வானிலை
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இயல்பான அளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் சென்றுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்றும் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி கூறியுள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளதால் அணைகள் நிரம்பியுள்ளன. உணவு தானிய உற்பத்தியும் அபரிமிதாக உள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியின் 98 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ராஜீவன் தெரிவித்தார்.
ஒடிசா, பீகார், ஜார்கண்ட், வடக்கு-சத்தீஸ்கர், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் மற்ற எல்லா பகுதிகளிலும் மழை சராசரி அளவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழைக்காலங்களில் பயமுறுத்தும் எல் நினோவுக்கு மிகக் குறைவான வாய்ப்பு உள்ளது என்றும் இந்தியவானிலை மையம் கூறியது. இந்திய பருவமழையை நேரடியாகக் கொண்டிருக்கும் மற்றொரு வானிலை அமைப்பான இந்தியப் பெருங்கடல் இருமுனையும் இந்த ஆண்டு நடுநிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐயோ அடிக்கிறாரு- இது நேத்து.. மன்னிப்பு கேட்டாரு விட்ருங்க- இது இன்று.. சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா
சரியான நேரத்தில் தொடங்கும் பருவமழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும் நாட்டிற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடும் பொருளாதாரத்திற்கு பருவமழை பற்றி நல்ல தகவலை வானிலை மையம் கணித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் 2021 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியின் 103 சதவிகிதத்தில் இயல்பானதாக இருக்கும் என்று கூறியிருந்தது.
இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பருவமழை இயல்பானதாகவே இருந்தது, ஸ்கைமெட் படி, இதே போல 1996 முதல் 1998 வரை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது.
2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பானதாக இருக்க 85 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகவும், இந்த ஆண்டு நாட்டில் பரவலாக வறட்சி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் ஸ்கைமெட் கூறியது. நல்ல மழையால் 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உணவு தானிய அறுவடை 300 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.