150 பேருடன் சென்ற விமானத்தில் நடுவானில் என்ஜின் கோளாறு.. பயணிகள் திக் திக்! டெல்லியில் அவசர தரையிறக்கம்
டெல்லி: 150 பேருடன் லடாக்கின் லே நகரத்திற்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது என்ஜின் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ந்து போயினர். இதையடுத்து விமானியின் சாதுர்யத்தால் அந்த விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் இருந்து லடாக்கில் உள்ள லே நகரத்திற்கு 150 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலை புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

நடுவானில் விமானத்தில் என்ஜின் கோளாறு
நடுவானில் என்ஜின் கோளாறு கண்டறியப்பட்டதால் பயணிகள் அதிர்ந்தனர். உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்ட பைலட் விமானத்தை அவசர காலம் கருதி மீண்டும் தரையிறங்க அனுமதி கேட்டார். விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்ததும் விமானம் மீண்டும் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கபட்டது.
இன்று அதிகாலை 6.45 மணியளவில் விமானம் டெல்லியில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளறை கண்டறிந்து சீர் செய்யும் பணியில் விமான நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
150 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றம்
டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
காக்பிட் அறையில் தீ எச்சரிக்கை அலர்ட் எதுவும் இல்லை" என்று கூறினார். டெல்லியில் 150 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்பட்ட இடத்திற்கே முழு எமெரெஜென்சி அலர்ட்டுடன் மீண்டும் தரையிறங்கிய சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே டே அழைப்பு விடுத்து தரையிறக்கம்
விமானத்தில் என்ஜின் கோளாறு கண்டறியப்பட்டதும் முழு எமர்ஜென்சியாக மே டே அழைப்பை பைலட் விடுத்துள்ளார். இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து 6.08 மணிக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் 6.49 க்கு தரையிறங்கியது. விமானம் மே டே அழைப்பு விடுத்து தரையிறங்கியதால், விமானம் தரையிறங்க தேவையான முன்னேற்பாடுகளையும் விமான நிலைய ஊழியர்கள் செய்து வைத்து இருந்தனர்.
சமீபகாலமாக. விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு தாமதம் ஆகி வருவது பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 144 பயணிகளுடன் அகமதாபாத் புறப்பட்ட விமானம் இம்பாலுக்கு திருப்பி விடப்பட்டது. புழுதிப்புயல் காரணமாக குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டதால், விமானம் அவசரமாக திருப்பி விடப்பட்டது இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications