இலங்கையில் சீன உளவு கப்பல் என்ன செய்கிறது? நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம்.. ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது.
Recommended Video
இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளது. 'யுவான் வாங் 5' என பெயரிடப்பட்ட இக்கப்பலை சீனா ஆராய்ச்சி கப்பல் என அழைத்தாலும் இது உளவு கப்பல் என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

உளவா? ஆய்வா?
சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட யுவான் வாங் 5, 2005 முதல் சீன கடற்படையில் உள்ளது. சீனா இதை ஒரு ஆராய்ச்சிக் கப்பல் என்று அழைத்தாலும், இந்தக் கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. 222 மீட்டர் நீளமும் 25.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 2007 முதல் பல்வேறு மிஷன்களில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பல் 750 கிலோமீட்டர் ரேஞ்சை கொண்டு உள்ளது.

நிலை நிறுத்தம்
அதாவது 750 கிலோமீட்டர் தூரம் வரை இருக்கும் பகுதிகளில் ஏவுகணைகளின் செயல்பாடுகளை இந்த கப்பலால் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தையும் இது கண்காணிக்க முடியும். டெக்கன் பகுதியில் உள்ள ஏவுகணைகளையும் இதனால் கண்காணிக்க முடியும். தற்போது இந்த கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு
இந்த கப்பல் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் நிலைமையை உற்றுக் கவனித்து வருவதாகவும் மத்திய அரசு கடந்த மாதமே தெரிவித்து இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனைப் பாதிக்கும் செயல்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறி இருந்தது. இந்நிலையில், தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அண்டை நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.

எச்சரிக்கை
"நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேசத்தின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் நாங்கள் மிகவும் கவனமாக கண்காணிக்கிறோம்" என்றும் ஜெய்சங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இந்த உளவு கப்பல் ஆகஸ்ட் 22ம் தேதிவரை இலங்கையில் இருக்கும். மேற்குறிப்பிட்ட சர்ச்சையை இந்தியா எழுப்பிய நிலையில், "இந்த கப்பல் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதிக்காது" என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியிருந்தார்.
"ஆனால் அதேபோல மூன்றாம் தர உலக நாடுகளால் இக்கப்பல் தடுக்கப்படக்கூடாது" என்றும் அவர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications