பொருளாதார நெருக்கடியில் இலங்கை- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று இந்தியா வருகை
டெல்லி: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இந்தியாவுக்கு 3 நாட்கள் பயணமாக வருகை தருகிறார். இப்பயணத்தின் போது பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரையும் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து பேசுகிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும் அன்னிய செலாவணி கையிருப்பு காலாவதியானதாலும் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை மிக மோசமாக உயர்வடைந்துள்ளது.
இன்னொரு பக்கம் சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை திருப்பித் தந்தாக வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. அப்படி இலங்கை உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அந்நாட்டின் பகுதிகளை குத்தகைக்கு சீனா எடுத்துக் கொள்ளும் என்கிற நிலைமையும் உள்ளது.

இந்தியாவிடம் கடனுதவி
இதனால் இந்தியாவிடம் திடீரென நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை. இதற்காக இலங்கை தீவில் இந்தியா கால்பதிக்க விரும்பிய திட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவிடம் எதிர்பார்த்த கடனுதவிகளையும் இலங்கை பெற்று வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சனை
அதேநேரத்தில் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் எழுதப்படவிருக்கிறது. இந்த அரசியல் சாசனம் ஒற்றையாட்சி முறையை வலியுறுத்த உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆகக் குறைந்தபட்சம் 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் சொல்லப்பட்ட மாகாண சபைகளை இணைக்கும் 13-வது அரசியல் திருத்தத்தையாவது அமல்படுத்த வேண்டும்; அதனை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் அனுப்பி இருந்தனர். தமிழ்த் தலைவர்கள் குழு விரைவில் டெல்லிக்கு வருகை தரக் கூடும் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்தியா வரும் ஜி.எல்.பீரிஸ்
இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 3 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகை தருகிறார். இப்பயணத்தின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி, சீனாவிடம் சிக்கிக் கொண்ட விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் ஜி.எல்.பீரிஸ் விவாதிப்பார் என கூறப்படுகிறது.

தமிழக மீனவர் பிரச்சனை
ஏற்கனவே இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகுகளையும் ஏலம்விடவும் இலங்கை முடிவு செய்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்; இந்தியா வரும் ஜி.எல்.பீரிஸிடம் இது குறித்து பேச வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications