சீனாவுக்கும் வருவேன்.. உறுதியளித்துவிட்டு இந்தியா வருகை தரும் இலங்கை ஜனாதிபதி ரணில்!
டெல்லி: பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வரும் 20-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்திய பயணத்தைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் சீனாவுக்கு ரணில் பயணம் மேற்கொள்வார் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த ஆண்டு இதே காலம்.. லட்சக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் கொழும்பில் ஒன்று திரண்டு உக்கிரமாக போராடி ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவை பதவி விலக செய்து இலங்கையைவிட்டே ஓடவைத்தனர்.

இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே.. பிரதமராக மகிந்த ராஜபக்சே.. பதவி வகித்த காலத்தில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை மிக மோசமாக உயர்ந்தது இதனையடுத்து பொதுமக்கள் கொந்தளித்தனர். இதனால் முதலில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். பின்னர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகி நாட்டைவிட்டே தப்பி ஓடினார். ஒவ்வொரு நாடாக அடைக்கலம் கேட்டு எந்த நாடும் அடைக்கலம் தராத நிலையில் இலங்கைக்கே திரும்பினார் கோத்தபாய. இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய அரசியல் மாற்றங்களில் ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியானார்.
கடந்த ஓராண்டு காலமாக ரணில் விக்கிரமசிங்கே இந்தியா பயணம் மேற்கொள்வார் என கூறப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியது. இன்னொரு பக்கம் சீனாவும் இலங்கைக்கு போட்டி போட்டுக் கடன் வழங்கியது.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வரும் 20-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. டெல்லியில் ஜூலை 21-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ரணிலுடன் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் இந்தியா வருகை தர உள்ளது.
இதனிடையே ரணில் விக்கிரமசிங்கே, சீனாவுக்கு அக்டோபர் மாதம் பயணம் மேற்கொள்வேன் என உறுதி அளித்துள்ளார் எனவும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இலங்கையில் சீனா வசம் இருக்கும் அம்பாந்தோட்டை சுற்றிய பகுதிகளில் புதிய திட்டங்களை சீனா தொடங்க ரணில் வலியுறுத்தக் கூடும் எனவும் அச்செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications