இந்தியா அலர்ட்- இலங்கையில் இஸ்ரேலியர் மீது தாக்குதல் சதித் திட்டம் தீட்டிய தமிழர் உட்பட 2 பேர் கைது
டெல்லி: இலங்கையில் இஸ்ரேலியர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக தமிழர் உட்பட 2 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா தந்த உளவு தகவலின் அடிப்படையிலேயே இஸ்ரேலியர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 2 பேரை இலங்கை கைது செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளில் இஸ்ரேல் அதிஉக்கிரத் தாக்குதல்களை நடத்தியதால் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்களை அழித்தொழிக்கும் வகையில் இஸ்ரேல் இத்தாக்குதல்களை நடத்துவதால் உலகம் கண்டிராத மிக மோசமான மனிதப் பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் பெரும் போர் பதற்றத்துக்குள்ளாக்கி இருக்கிறது இஸ்ரேலின் மூர்க்கமான யுத்த நடவடிக்கைகள்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள், இஸ்ரேலுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தலாம்; இதன் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேலின் மொசாத் உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய நபர்கள் மீது இந்திய புலனாய்வுத் துறை, இலங்கைக்கு சில தகவல்களை வழங்கியது. இந்த தகவல்களை அலட்சியப்படுத்தாத இலங்கை அரசு உடனடியாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையின் அறுகம்பே என்ற இடத்தில்தான் இஸ்ரேலியர்கள் தங்கி உள்ளனர். இந்தப் பகுதியில்தான் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பதும் இந்தியாவின் உளவுத் தகவல்.
இதனடிப்படையிலான தேடுதல் நடவடிக்கையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் தமிழர். மற்றொருவர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்.
இஸ்ரேலியர் மீதான தாக்குதல் சதித் திட்டத்துக்காக கைது செய்யப்பட்டவர்,
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கொழும்பில் வசித்து வந்த இந்த தமிழர், 2016-ம் ஆண்டு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாட்டவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் இந்த தமிழர். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் இந்த தொடர்புகளை பயன்படுத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதித் திட்டமும் தீட்டியிருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஈராக்கைச் சேர்ந்த நபர் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு சிறையில் இருக்கிறார். அவர்தான் இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டவராம். அந்த நபர் மூலமே இஸ்ரேலியர் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு முதல் கட்டமாக ரூ50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் இலங்கை பயங்கரவாத தடுப்புப் போலீசார்.
இலங்கையில் இஸ்ரேலியர்களை மட்டுமல்லாமல் அந்நாட்டின் சுற்றுலா தலங்களையும் இந்த பயங்கரவாத கும்பல் இலக்கு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இலங்கையில்தான் அடுத்த பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க இருப்பதாக இந்தியா மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு உளவுத் தகவல்களை அனுப்பி எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications