குறைகிறது ஜிஎஸ்டி? இன்று நடக்கும் நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்.. வரி எந்தளவுக்கு குறையும்?
டெல்லி: தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டியில் முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக மறு ஆய்வு செய்ய மாநில நிதியமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வரி முறைகளை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. அதன்படி நாடு முழுக்க எல்லா மாநிலங்களிலும் இப்போது ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மறைமுக வரியை முறைப்படுத்தவே ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டது.. இப்போது 5%, 12%, 18%, மற்றும் 28% என 4 பிரிவுகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி
அதாவது ஜீரோ ஜிஎஸ்டி எனத் தனிப் பிரிவு இருக்கிறது. அந்தப் பொருட்களுக்கு வரி எதுவும் இருக்காது. அதுபோக இந்த 4 அடுக்குகளில் வரிகள் விதிக்கப்படுகிறது. அதேநேரம் தற்போது பல பொருட்களுக்கு வரி அதிகமாக இருப்பதாகவும் இதனால் வரியைக் குறைக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், ஜிஎஸ்டி முறையில் சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி
இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்ற அவர், 'அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி சீர்திருத்தத்தை' அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். தனிநபர்களுக்கான அத்தியாவசியச் சேவைகளின் வரி கணிசமாகக் குறைக்கப்படும் என்ற அவர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பயனடையும் என்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் விலை குறையும் என்றும் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த அடுத்த தலைமுறை வரைவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய, மாநில நிதியமைச்சர்களைக் கொண்டுள்ள அமைச்சர்கள் குழுக்களின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
என்ன ஆலோசனை
ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் அமைக்கப்பட்ட இந்த அமைச்சர்கள் குழுக்கள் வரி விகித சீரமைப்பு, காப்பீடு மற்றும் இழப்பீட்டு வரி குறித்த அம்சங்களை ஆலோசிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அளிக்கப்படும் பரிந்துரைகள் அடுத்த கட்டமாக ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லப்படும். வரி சீர்திருத்த முன்மொழிவு குறித்து விவாதிக்க, ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பே குறிப்பிட்டது போல இப்போது ஜிஎஸ்டி 4 அடுக்குகளில் வசூலிக்கப்படுகிறது. அதில் 12% வரி அடுக்கை முழுமையாக மத்திய அரசு நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் 12% வரி அடுக்கில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் 5% வரி அடுக்கிற்கு வரும். இதன் மூலம் பல்வேறு பொருட்களின் வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வருவாய்
வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்படும். இதனால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, அதைச் சரி செய்ய என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனைகள் நடக்கும் எனத் தெரிகிறது. சிகரெட், ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றின் வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications