குலுங்கிய டெல்லி.. கடும் நில அதிர்வு.. அச்சத்தில் வீடுகளை விட்டு ஓடி வந்த மக்கள்.. பரபரப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் கடும் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாளத்தில் ரிக்டர் அளவில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகலில் கடும் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்ட இந்த நில அதிர்வால் வீடுகள் அதிர்ந்தன.
இதனால், மக்கள் அச்சம் அடைந்த வீடுகளை விட்டு வெளியேறினர். நேபாளத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது.

ரிக்டர் அளவில் 5.8
நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. உத்தரகாண்டின் பிதோராராகார் பகுதியில் இருந்து 148 கி.மீட்டர் கிழக்கே உள்ள இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதியில் கடுமையாக உணர முடிந்தது.

கட்டிடத்தை விட்டு வெளியே
நில அதிர்வு காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் திடீரென அசைந்தன. சீலிங் பேன்கள் ஆடுவது.. வீட்டில் இருந்த பொருட்கள் அசைவது போன்ற காட்சிகளை படம் பிடித்து டெல்லி நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். டெல்லியில் உள்ள உயரமான கட்டிடங்களில் இந்த நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. அச்சத்தில் பல அலுவலகங்களிலும் ஊழியர்கள் கட்டிடத்திற்கு வெளியே வந்து நின்றதை காணமுடிந்தது. இதனிடையே, நில அதிர்வை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்ககளையும் வெளியிட்டு வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது
இதற்கு முன்பாக தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது அண்டை மாநிலமான அரியானாவில் 3.8 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் ஏற்பட்டது. மக்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிக்கொண்டு இருந்த போது நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், மக்கள் சற்று பீதி அடைந்தனர்.

அடிக்கடி நிலநடுக்கங்கள்
கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி, என்.சி.ஆர் மற்றும் வட இந்திய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இது உத்தரகாண்ட் மாநிலம் ஜோசிமத்தில் இருந்து தென்கிழக்கில் 212 கிலோமீட்டர் தூரத்தில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவானது. நேபாளம் மற்றும் வட இந்திய பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications