செப்.21 முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் சுயவிருப்பத்தின் படி பள்ளிக்கு வரலாம்.. இதை கவனமாக பாருங்க
டெல்லி: செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுயவிருப்பத்தின் படி பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையை அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் இந்த கல்வியாண்டில் எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்று காத்திருக்காமல் கீழ்கண்ட மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைபின்பற்றி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன. சுற்றுலா தளங்களும் நாளை முதல் திறக்கப்படுகின்றன. திரையரங்குகளை தவிரி அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. எனினும் பொதுக்கூட்டம், ஊர்வலம் உள்ளிட்டவற்றுக்கு தடை நீடிக்கிறது. இதேபோல் சமூகஇடைவெளி அவசியம் என்பதால் பள்ளிகள் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

பள்ளிக்கு வரலாம்
கொரோனா முடியாமல் பள்ளிகளை திறப்பது கடினம் என்கிற நிலை உள்ளதால் பள்ளிகளை திறக்க மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனினும் உயர் வகுப்பு மாணவர்கள் மட்டும் சுயவிருப்பதின் பேரில் பள்ளிக்கு வந்து செல்லலாம் என்று அன்லாக் 4.0ல் அறிவித்தது. இதன்படி அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

மாணவர்கள் வரலாம்
செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுயவிருப்பத்தின் படி பள்ளிக்கு வரலாம் என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 21 முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.

6 அடி தனிமனித இடைவெளி
பெற்றோர் ஒப்புதல் பெற்ற பின்னரே மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 6 அடி தனி மனித இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டு றெறிமுறையில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மனஅழுத்தம் கூடாது
பள்ளிக்கு சுய விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்கள், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் (கொரோனா கட்டுப்பாட்டு பகுதி) மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது ஆலோசனை வழங்கப்பட வேண்டும். பிரார்த்தனை கூட்டம், விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்றவற்றுக்கு அனுமதியில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்களே பள்ளிக்கு சென்று ஆலோசனை பெற மேற்கண்ட ஆலோசனைகளை கட்டாயம் கடைபிடித்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாமல் செயல்படுவது மிக முக்கியம் ஆகும்.












Click it and Unblock the Notifications