சிஏஏ-வுக்கு எதிராக.. டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியாவில் வெடித்தது போராட்டம்! மாணவர்கள் கைது
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. முற்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்ட 55 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் வடக்கு வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) இந்திய மாணவர் சங்கம் (SFI) போன்ற மாணவர் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தின் பீட கட்டிடத்தில் இருந்து மத்திய நூலகத்திற்கு அணிவகுப்பும் நடத்தப்பட்டது. ஆனால், காவல்துறையினர் இதற்கு அனுமதிக்கவில்லை. எனவே 55 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் புராரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, மாணவர்களை அமைதியாக இருக்கமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் கேட்கவிலலை. எனவே கைது செய்தோம். பின்னர் சிறிது நேரம் கழித்து அனைத்து மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்" என்று கூறியுள்ளனர்.
கைது நடவடிக்கையின் போது மாணவர்கள் சிலர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக மாணவர் சங்கத்தினர் கூறியுள்ளனர். டெல்லி பல்கலை மட்டுமல்லாது ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் மற்றொரு முக்கியமான கல்வி நிலையமாக கருதப்படும் ஜெஎன்யுவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜேஎன்யுவில் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மாணவர்கள் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தவில்லை.
இந்த போராட்டங்கள் குறித்து அனைத்து மாணவர் சங்கத்தினரும் கூட்டு அறிக்கையை விடுத்திருக்கின்றனர். அதில், சிஏஏ ரத்து செய்யப்பட வேண்டும், சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
டெல்லி மட்டுமல்லாது அசாம் மாநிலத்திலும் அனைத்து மாணவர் சங்கத்தினர் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர். நேற்றிரவு தீ பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல கேரள மாநிலத்திலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இஸ்லாமிய மாணவர் அமைப்பினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications