விஜய்க்கு சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு.. தமிழக ஆளுநருக்கு வைத்த கோரிக்கை
டெல்லி: "தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தமிழக ஆளுநர் இதுவரை தவெக தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நலன் கருதி, தமிழக ஆளுநர் உடனடியாக தவெக தலைவரை அமைச்சரவை அமைக்க அழைக்க வேண்டும் என்றும், அவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நான் கோருகிறேன்." இவ்வாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாஜகவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி எப்போதும் இது போன்ற அரசியலமைப்புச் சட்ட ரீதியான நுணுக்கங்களை அதிரடியாகப் பேசுவார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்க்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது வாதமாக உள்ளது.

இது ஒருபுறம் எனில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி, தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சியிடம் உதவி கேட்டுள்ளார். இதைடுத்து தமிழக மக்களின் தீர்ப்பை மதித்து, தவெக ஆட்சி அமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் முழு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது.
எனினும் காங்கிரஸ் ஒரு தெளிவான நிபந்தனையை விதித்துள்ளது. அதில் "இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாத மதவாத சக்திகளை இந்த கூட்டணியில் சேர்க்கக்கூடாது" என்று கூறியுள்ளனர். இது நேரடியாக பாஜக மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் சக்திகளைத் தள்ளி வைக்கச் சொல்லும் நிபந்தனையாகவே பார்க்கப்படுகிறது.
தவெகவிற்கு 108 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் ஆதரவு காரணமாக 113 என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவு தந்தாலே ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நாளை அனைவருமே ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் ஒரு பிரிவினர் அல்லது மொத்த அதிமுகவும் ஆதரவு தெரிவிக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு அதிகமாக உள்ளது. இது ஒருபுறம் எனில் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வந்துள்ளார். அவரை நேரில் சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 74 இடங்களை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை பெற்றது.

இந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தா.மோ.அன்பரசன், நாசர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். புதிய சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. தனியாக 47 இடங்களை மட்டும் பெற்ற அ.தி.மு.க.வுக்கு இந்த முறை மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.














Click it and Unblock the Notifications