இந்தியில் வழக்காடுவதா? திடீரென டெல்லி கோர்ட்டில் பொங்கிய சு.சுவாமி!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீதிமன்றத்தில் இந்தியில் வாதாட பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவன சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் மூலம் முறைகேடாக சோனியா, ராகுல் காந்தி பெற்றதாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இன்று சுப்பிரமணியன் சுவாமியிடம் சோனியா, ராகுலின் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ். சீமா மற்றும் தரன்னும் சீமா ஆகியோர் கிடுக்குப்பிடி குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விசாரணையின் போது சீமா, இந்தியில் சில கருத்துகளை முன் வைத்தார்.
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தில் ஆங்கிலம் மட்டும்தான் வழக்காடும் மொழி எனவும் சுட்டிக்காட்டினார். ஆனாலும் வழக்கறிஞர் சீமா இந்தியில் பேசினார்.
இதனால் டென்ஷனான சுப்பிரமணியன் சுவாமி, நான் ஒரு தமிழர் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட மாஜிஸ்திரேட் சமர் விஷால், இந்தியும் ஆங்கிலமும் நீதிமன்ற வழக்காடு மொழிகள். இந்தி நமது தேசிய மொழி என குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications