இந்தி எதிர்ப்பா? கருணாநிதி எதிர்த்தார்..1991 திமுக ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிட்டோம்! எச்சரித்த சு.சுவாமி
டெல்லி: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், பாஜக, திமுக இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், இந்தி கற்க விரும்பும் தமிழர்களை திமுக தடுக்க முடியாது என கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி.
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சு தமிழகம் முழுவது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது.

இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இது ஒருபுறம் இருக்க இருமொழிக் கொள்கை தான் தமிழ்நாட்டில் இருக்கும், மும்மொழி கொள்கைக்கோ, இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் இடம் கிடையாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தி கற்க விரும்பும் தமிழர்களை திமுக தடுக்க முடியாது என கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இந்தி கற்க விரும்பும் தமிழர்களை திமுக எதிர்க்க முடியாது. அவ்வாறு செய்தால், அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

1991ஆம் ஆண்டு நான் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராக இருந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ததை முதல்வர் கருணாநிதி எதிர்த்தார். திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்து தேர்தலை நடத்தினோம். மொத்த தொகுதிகளில் திமுகவுக்கு 2 எம்எல்ஏ சீட் மட்டுமே கிடைத்தது!!" என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வரி செலுத்த முடியாது என்றால் திமுக ஆட்சியை கலைப்போம் என பாஜக தலைவர் எஸ்.ஆர்.சேகர் கூறியிருந்த நிலையில், தற்போது அதே கருத்தை பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1991 ஆட்சி கலைப்பு: 1989 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அப்போது இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றது. மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட 13 பேர் சென்னையில் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக புகார் கூறப்பட்டது. 1990-91-ம் ஆண்டு பிரதமராக சந்திரசேகர் இருந்த போது அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. திமுகவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என கூறி அரசியல் சாசனம் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைத்தார் சுப்பிரமணியன் சுவாமி.












Click it and Unblock the Notifications