வயநாடு நிலச்சரிவு..ரூ. 15 கோடி நிவாரணம் கொடுக்க தயார்..மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர்
டெல்லி: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 கோடி ரூபாய் நிவாரண நிதியைத் தர தயாரகவுள்ளதாக மோசடி வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்தனர்.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15 கோடி நிவராண நிதி மற்றும் 300 வீடுகளை கட்டித் தர தயாராக இருப்பதாகவும், இதனை சட்டப்பூர்வமாக வங்கிக் கணக்குகளில் இருந்து அளிப்பதாகவும் கேரள முதல்வருக்கு சுகேஷ் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ள நிலச்சரிவு சம்பவம் என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
மிகவும் கடினமான இந்த சூழ்நிலையில் எனது சிறு பங்களிப்பாக 15 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கத் தயாராக உள்ளேன். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 300 வீடுகளை கட்டித் தரவும் ஆவலாக இருக்கிறேன். இதனை சட்டப்பூர்வமாக எனது வங்கிக் கணக்குகளில் இருந்து அளிக்கிறேன். கேரள முதல்வர் இந்த நிவாரண உதவியை பெரிய மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் இந்தக் கடிதத்துக்கு கேரள மாநில அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தக் கடிதத்தை சுகேஷ்தான் எழுதியுள்ளார் என அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக் கூறியுள்ளார். பல முக்கிய பிரமுகர்களிடம் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் தற்போது டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications