கிறிஸ்தவம், இஸ்லாம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் புது வழக்கு!
டெல்லி: கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்சி- SC அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆய்வு செய்ய மத்திய அரசு அண்மையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தது. மதம் மாறியோருக்கு எஸ்சி அந்தஸ்து கோரும் விவகாரத்தை தாமதப்படுத்தவே இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1947-ல் நாடு விடுதலை அடைந்த காலத்தில் தலித் இன மக்கள் மட்டுமே எஸ்சி - தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டனர். இந்துக்களிடம்தான் தீண்டாமை இருக்கிறது; ஆகையால் தலித் இந்துக்கள் மட்டுமே எஸ்சி பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். 1956, 1990களில் இந்து மதத்தின் உட்பிரிவுகளாக சீக்கியம், பவுத்தம் ஏற்கப்பட்டு, சீக்கியம்- பவுத்தம் மதங்களுக்கு மாறிய தலித்துகளும் எஸ்சி பட்டியலில் இடம்பெற்றனர்.

அதேநேரத்தில் இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய தலித்துகள் எஸ்சி-தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பாக 2004-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையிலும் இருக்கின்றன.
இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இஸ்லாம்- கிறிஸ்தவம் மதங்களுக்கு மாறிய தலித்துகளும் எஸ்சி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆராயப்படும். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும். இது குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்தே மத்திய அரசு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ரவீந்தர்குமார், யுஜிசியின் சுஷ்மா யாதவ் இடம்பெற்றனர். இந்த ஆணையமானது, இஸ்லாம்- கிறிஸ்தவம் மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவதை தாமதப்படுத்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பிரதாப் பாபுராவ் பண்டிட் இந்த புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், மஹர் ஜாதியை சேர்ந்த தாம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினேன். எங்களுக்கு 72 ஆண்டுகளாக நீதி கிடைக்கவில்லை. இந்த பிரச்சனையில் 2004-ம் ஆண்டு முதல் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாங்கள் 18 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கிறோம். இத்தகைய ஆணையங்கள் அமைப்பதால் எங்களுக்கான நீதி கிடைப்பது தாமதமாகிறது. ஆகையால் இத்தகைய ஆணையங்கள் அல்லாமல் உரிய நீதி வழங்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications