ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு.... அவசரமாக விசாரிக்க மறுப்பு
டெல்லி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்
கடந்தாண்டு மே 22 ஆம் நாள் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது.
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான ஆணையை 3 வாரத்துக்குள் பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்நிலையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
விசாரணைக்கு ஏற்பு
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.