ஆளுநருக்கு எதிராக “அஸ்திரம்”.. தமிழக அரசின் மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்! அடுத்த வாரம் இறுதி விசாரணை
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த கூடுதல் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி தலைவரையும் சேர்த்து தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார்.

தமிழக அரசு கடந்த டிச.9ம் தேதி மற்றும் டிச.13ம் தேதி யு.ஜி.சி தலைவரை விடுத்து பிற மூன்று உறுப்பினர்களை கொண்டு தேடுதல் குழுவை அமைத்து அரசாணையை வெளியிட்டது. ஆனால் அந்த அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும், யு.ஜி.சி தலைவரை இணைத்து துணைவேந்தர் தேடுதல் குழு அரசாணையை வெளியிட வேண்டும் என பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு தொடர்பாக கூடுதல் மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. ஆளுநரின் உத்தரவு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன செயல்முறையில் அரசியல் சாசன விதிகள்படி நடைமுறை உரிமை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் சாசன விதிகளுக்கு முரணாகவும் உள்ளது.
எனவே தமிழ்நாட்டில் ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் மேற்கூறிய விவகாரங்களையும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காக தற்போது தாக்கல் செய்துள்ள கூடுதல் விவர மனுவையும் ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என தமிழக அரசு கோரியுள்ளது.
இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக புதிய மனு தாக்கல் செய்ததை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் சுட்டிக்காட்டினர்.
வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவனிடம் கோரிக்கை வைத்தார். புதிய மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications