ஸ்டெர்லைட் வழக்கு.. 3 நாட்கள் மாறி மாறி விவாதம்.. பிப்.5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!
ஸ்டெர்லைட் வழக்கு பிப்ரவரி 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 5 தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட்ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு போட்டது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயமும், ஆலையை திறக்கலாம் என சொன்னது.

மேல்முறையீடு
இந்த அறிவிப்பு தமிழகத்தில் திரும்பவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

ஆலைக்கு மின்சாரம்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றமும், ஆலையை நிர்வாக பணிக்காக திரும்பவும் திறக்கலாம் என்று சொல்லி அதற்காக மின்சாரம் வழங்கவும் உத்தரவிட்டது. மேலும் இது சம்பந்தமாக விரிவான தீர்ப்பு ஜனவரி 29-ந்தேதி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து, கடந்த 29-ம் தேதி முதல் இது சம்பந்தமான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

3-வது நாள்
தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி ஆலையை திறக்கவே கூடாது என்று வாதிட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் முக்கியமான விதிகளை வேதாந்தா நிறுவனம் கடைபிடிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இன்று 3-வது நாளும் விவாதங்கள் தொடர்ந்தன.

ஒத்தி வைப்பு
ஆலையை திறப்பது குறித்தும், திறக்கக்கூடாது என்பது குறித்தும் இரு தரப்பிலும் விவாதங்கள் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அன்றைய தினம் இது சம்பந்தமான அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications