ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி ஓகா கண்டனம்
டெல்லி: பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓகா கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஜாமீனில் வந்ததும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது.

அதன்படி செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஓகா, "மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது ? என்னதான் நடக்கிறது" என நீதிபதி அபே ஓகா கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க பயப்படுவார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி ஓகா, இதுகுறித்த விளக்கத்தை பிரமாண பத்திரமாக அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையும் இருந்ததால் அமலாக்கத் துறையும் வழக்கில் உள்ளே வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவர் வகித்த மின்சாரத் துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் 243 நாட்கள் வரை இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி தொடர்ந்தார். அவருடைய ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நிறுத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து பல முறை ஜாமீன் மனு ரத்தான நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே அமைச்சரவையில் மாற்றம் என தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த 3 நாட்களில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. அதிலும் அவர் ஏற்கெனவே வகித்த மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்ததும் எதற்காக செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதே கேள்வியை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications