அயோத்தி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு.. தீர்ப்பை தீர்மானித்தது இந்த அம்சம்தான்
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தொல்லியல் துறை ஆய்வு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புள்ள நிர்மோகி அகாரா மற்றும் ஷியா அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இறுதியாக சன்னி வக்பு வாரியம் மற்றும் ராம ஜென்மபூமி நியாஸ் ஆகிய இரு அமைப்புகளில் எந்த அமைப்புக்கு எந்த நிலம் சொந்தம் என்பது தொடர்பாக தான் தீர்ப்பு விரிவாக சொல்லப்பட்டது.
இந்த விஷயத்தில் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு, சர்ச்சைக்குரிய நிலம் ஏன் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக தீர்ப்பில் விரிவான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் வாசித்துக் காட்டியதில் உள்ள அந்த முக்கிய அம்சங்கள் இவை தான்:

காலி இடம் இல்லை
சர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியல்துறை ஆய்வுகள் நடத்தி இருந்தது. அந்த ஆய்வில் பாபர் மசூதி ஏற்கனவே காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதியாகியது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தின் கீழே ஏற்கனவே கோயில் இடிபாடு இருந்ததை தொல்லியல்துறை ஆதாரங்களுடன் நிரூபித்து விட்டது.

இஸ்லாமிய வழிபாட்டு தலம் இல்லை
மசூதியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட அந்த கட்டுமானம் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் இல்லை என்பதும் ஆதாரங்களுடன் நிரூபணமாகிவிட்டது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தின்கீழே இருந்த அந்த கட்டுமானம் கோவில் போன்ற அமைப்பு என்ற போதிலும், அது எந்த தெய்வத்திற்கான கோவில் என்பது தொல்லியல் துறையால் நிரூபிக்கப்படவில்லை.

அடிப்படை உரிமை
இருப்பினும் அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. மத நம்பிக்கை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாகும். 1855ம் ஆண்டுக்கு முன்புவரை சர்ச்சைக்குரிய உள் பகுதிக்கும் இந்துக்கள் சென்று வந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ராம ஜென்மபூமி நியாஸ்
இவ்வாறு தலைமை நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் சர்ச்சைக்குரிய நிலம் சன்னி வக்பு வாரியத்துக்கு உரிமையானது அல்ல என்றும் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு சொந்தமானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தொல்லியல் துறை ஆய்வு
எனவே இந்த விவகாரத்தில் தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன் அயோத்தி ராமர் பிறந்த இடம் என்ற இந்துக்கள் நம்பிக்கைக்கும், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் முக்கியத்தும் வழங்கியுள்ளதை தீர்ப்பின் அம்சங்கள் உறுதிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications