சிவில் வழக்குகளை கிரிமினல் கேஸாக மாற்றுவதா? உச்ச நீதிமன்றத்திடம் வாங்கி கட்டிய உத்தரபிரதேச பாஜக அரசு
லக்னோ: கொடுக்கல் வாங்கல், நிலப்பிரச்சினை தொடர்பான சிவில் வழக்குகளை கிரிமினல் வழக்குகளாக பதிவு செய்ததற்கு உத்தர பிரதேச காவல் துறையை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக இதுபோன்று நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உள்ளாகியிருக்கிறது உத்தர பிரதேச பாஜக அரசு.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கடிந்து கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், சிவில் வழக்குகளை எப்படி கிரிமினல் வழக்குகளா மாற்றலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 4 மாதத்தில் இதுபோல உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உத்தர பிரதேச ஆசு உள்ளாவது இது 2-வது முறையாகும்.

கிரிமினல் குற்றமாகாது
கொடுக்கல் வாங்கல் தொடர்பான மோசடி வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணத்தை திருப்பி கொடுக்காத வழக்கு கிரிமினல் குற்றமாகாது எனத் தெரிவித்துள்ளது. மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது:-
உத்தர பிரதேசத்தில் தினமும் நடக்கும் வினோதமான சம்பவமாக இது உள்ளது. பணம் கொடுத்து விட்டு அதை திருப்பி கொடுக்காமல் இருக்க கூடிய பிரச்சினை என்பது கிரிமினல் குற்றமாகாது. இது ஒரு வழக்கே இல்லை. இது சட்டத்தின் படி நடக்கும் ஆட்சியின் சீர்குலைவு ஆகும்" என்று காட்டமாக கூறியது. மேலும், விசாரணை அதிகாரியையும் கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், இதுபோன்ற நடவடிக்கை அபத்தமானது.
மறக்க முடியாத உத்தரவு பிறப்பிக்கப்படும்
சாட்சிக் கூண்டில் ஏற சொல்லிவிடுவேன் என காட்டமாக கூறியதோடு கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதித்தது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதமும் உத்தர பிரதேச காவல்துறைக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்தது. அதாவது, சிவில் வழக்குகளை கிரிமினல் வழக்குகளாக தொடர்ந்து மாற்றும் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும் என்றும் கூறியது.
இந்த நடைமுறை நிறுத்தப்படாவிட்டால், தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது. நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றை கிரிமினல் வழக்காக பதிவு செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரபிரதேச காவல்துறையை கண்டித்து இருந்தது. இந்த நிலையில்தான் அடுத்த 4 மாதத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது உத்தர பிரதேச காவல்துறை.












Click it and Unblock the Notifications