நோ அசைவம்.. பூண்டு, வெங்காயம் கூட கட்! சுப்ரீம் கோர்ட் கேண்டீனில் திடீர் கட்டுப்பாடு! வெடித்த சர்ச்சை
டெல்லி: இந்துக்களின் முக்கியமான பண்டிகையான நவராத்திரி பண்டிகை இன்று தொடங்குகிறது. இந்த நவராத்திரியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டில் உள்ள கேன்டீனில் அசைவ மற்றும் பூண்டு & வெங்காயம் கலந்த உணவுகளை வழங்க வாய்மொழியாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் இது தொடர்பாகப் பதிவு சங்கத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
நமது நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியிருக்கிறது.

நவராத்திரி பண்டிகையையொட்டி வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். தொடர்ந்து 9வது நாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படும்.
உணவுக் கட்டுப்பாடு: அதன்படி இந்தாண்டும் நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியுள்ளன. இந்த நவராத்திரியை முன்னிட்டு உச்சநீதிமன்ற கேன்டீனில் அறிவிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளே இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நவராத்திரி பண்டிகை காரணமாக சுப்ரீம் கோர்ட் கேன்டீனில் அசைவ உணவுகள் வழங்கப்பட மாட்டாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. அசைவ உணவுகள் மட்டுமின்றி பூண்டு & வெங்காயம் கூட உணவில் சேர்க்கப்படாது எனத் தெரிகிறது.
கடிதம்: இதுவே இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளுக்குக் கவலை தெரிவித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் இணைந்து சுப்ரீம் கோர்ட் வக்கீல் பதிவு சங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர். கடந்த காலங்களில் நவராத்திரியை கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள், மற்றவர்களுக்கு எந்த தடையும் விதிக்காமல், உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதுவே சுப்ரீம் கோர்ட்டில் நடைமுறையாக இருந்துள்ளதாகவும் இருப்பினும், இந்தாண்டு திடீரென கட்டுப்பாடு விதித்து பண்டிகை காலத்தில் நவராத்திரி உணவை மட்டுமே வழங்க கேண்டீன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நவராத்திரி உணவு வழங்குவதை தாங்கள் எதிர்க்கவில்லை என்றாலும், இந்த உணவு மட்டுமே வழங்கப்படும் என்பது மற்றவர்களுக்கு அநீதியானது என்று வழக்கறிஞர்கள் தங்கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
மரபுகளுக்கு எதிரானது: அதில் மேலும், "உச்ச நீதிமன்ற கேண்டீன் அனைவருக்கும் உணவளிக்கிறது. அனைவரும் அதைச் சார்ந்தே இருக்கிறோம். ஒரு சிலரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அசைவம் அல்லது வெங்காயம்-பூண்டுடன் உணவைப் பரிமாறாதது நமது பன்மைத்துவ மரபுகளுக்கு எதிரானது. இது மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பு தருவதாக இருக்காது" என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, நவராத்திரி உணவுகளுடன் வழக்கமான மெனுவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கட்டுப்பாடு எதிர்காலத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் சிலருக்காக மற்றவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் கோரிக்கை: மேலும், இதை அனுமதிப்பது பன்மைத்துவத்தை மீறுவதாக அமையும் என்றும் இதனால் நவராத்திரி மெனுவுடன் வழக்கமான உணவுகளையும் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு பேசுபொருள் ஆன நிலையில், வழக்கறிஞர்கள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். வரும் நாட்களில் இந்த உணவில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications