சகிப்புத் தன்மையே இல்லை.. ஒரே கேலி, கிண்டல்! நீதிமன்றங்களைகூட விடல - இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்
“உலகின் மிகப்பெரிய ட்விட்டர் சமூக ஊடகத்திலும் கேலி, கிண்டல் செய்யும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன”
டெல்லி: மக்களிடம் பொறுமையும் சகிப்புத்தன்மையும் குறைந்துவிட்ட காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்து உள்ளார். சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் மற்றும் பெண் நீதிபதிகள் நியமனம் குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லியில் "உலகமயமாக்கல் காலத்தில் சட்டம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் தற்போது நிலை குறித்து வேதனையுடன் பேசினார்.
அவர் ஆற்றிய உரையில், "யாராவது கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்ச உணர்வுடன் ஒவ்வொரு சிறிய விசயத்தையும் செய்து வருகிறோம். நான் சொல்லும் இந்த விசயத்தை நம்புங்கள்.

கேலி கிண்டல்
உங்களை கேலி கிண்டல் செய்யும் நபர்கள் உங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொள்வது கிடையாது. தற்போது நாம் வாழும் காலத்தில் மக்களிடம் பொறுமை என்பது இல்லை. சகிப்புத் தன்மையும் அவர்களிடம் குறைந்து இருக்கிறது. பொறுமை குறைவாக உள்ளது என்று சொல்லும்போது சுருக்கமாக நான் பேச வேண்டும் என்று நினைவூட்டுகிறது.

சகிப்புத் தன்மை
வேறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே நாம் தயாராக இல்லை. மக்களிடம் சகிப்புத் தன்மை என்பதும் குறைவாகவே இருக்கிறது. குறுஞ் செய்திகளை பதிவிடும் உலகின் மிகப்பெரிய ட்விட்டர் சமூக ஊடகத்திலும் கேலி, கிண்டல் செய்யும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன. இதனை தடுப்பதற்கு கடுமையான சோதனைகளும் நடைமுறைகளும் உள்ளன.

சமூக வலைதளங்கள்
ஆனால், இது போன்ற நபர்களுக்கு யார் வேண்டுமானாலும் இலக்காகும் நிலை இருக்கிறது. இத்தகைய கேலியும் கிண்டலும் தாக்குதல்களில் கூட சில சமயங்களில் முடிந்துவிடுகிறது. நீதிபதிகள், நீதிமன்றங்களின் நடைமுறைகள் உட்பட ஒவ்வொரு விவகாரமும் சமூக வலைதளங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இதனை கருத்தில் கொண்டே சமூக ஊடகங்களில் ஒழுங்குமுறை வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. சமூக ஊடகங்களை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்காக மக்கள் பயன்படுத்தி வரும் சிக்கலையும் உச்சநீதிமன்றம் அடையாளம் கண்டு இருக்கிறது.

பெண் நீதிபதிகள் நியமனம்
பெண் நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் அதிகளவில் நியமனம் செய்வதை நிச்சயமாக நான் ஆதரிக்கிறேன். ஆனால், அது ஒரு சிக்கலான விசயம்." என்றார். சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்தும் பெண் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த இக்கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications