"முத்தலாக் போல இல்லை!" பாயிண்டை பிடித்த வக்கீல்.. நிறைவடைந்தது ஹிஜாப் விசாரணை.. தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பியூ கல்லூரிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இருப்பினும், கல்வி நிறுவனங்கள் தடையை விலக்கிக் கொள்ளவில்லை. இதையடுத்து இந்த விவகாரத்தில் முதலில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேல்முறையீடு
இந்த வழக்கைக் கர்நாடகா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அத்தியாவசியமானது இல்லை என்றும், கல்வி நிறுவனங்களில் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட் தெரிவித்தது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

விசாரணை
கடந்த 9 நாட்களாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இரு தரப்பும் தொடர்ச்சியாகப் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். இதனிடையே தாங்கள் பொறுமையை இழந்து வருவதாகவும் ஹிஜாப் வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறுப்பு வாதங்களை இன்று ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் நேற்று தெரிவித்து இருந்தனர்.

அரசு தரப்பு
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் 2021ஆம் ஆண்டு வரை எந்தவொரு மாணவியும் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரவில்லை என்றும் இந்த விவகாரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போராட்டத்தில் இருந்தே தொடங்கியதாகத் தெரிவித்தனர், அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா விவகாரத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனத் தெரிவித்தனர்.

குரான்
முத்தலாக் மற்றும் பசுக்களைப் பலியிடுவது போல் அல்லாமல், ஹிஜாப் குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தக்கவைத்துக்கொள்வது முஸ்லிம் பெண்களின் கடமை என வாதிட்டனர். மேலும், ஹிஜாப் மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை எப்படிப் பாதிக்கிறது என்பதை அரசு விளக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதை அணிவதற்கான எந்தவொரு கட்டுப்பாடும் முஸ்லீம் பெண்களின் சுதந்திரம் மற்றும் தனியுரிமையைப் பாதிக்கிறது என்று வாதிட்டனர்.

ஒத்திவைப்பு
மேலும் இது அவர்களின் கல்வி வாய்ப்புகளையும் பாதிப்பதாகக் குறிப்பிட்டனர். 10ஆவது நாளான இன்று நடந்த விசாரணையுடன் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இரு தரப்பு வாதங்களையும் கவனமாகக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குத் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications