தமிழ்நாடு அரசின் பெண்ணையாறு வழக்கு- நடுவர் மன்றம் எப்போ? மத்திய பாஜக அரசை விளாசிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: தமிழ்நாடு அரசு தொடர்ந்த பெண்ணையாறு வழக்கில் நடுவர் மன்றத்தை மத்திய பாஜக அரசு எப்போதுதான் அமைக்கும் என உச்சநீதிமன்றம் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எத்தனையோ முறை அவகாசம் தந்தும் பெண்ணையாறு நடுவர் மன்றத்தை ஏன் மத்திய அரசு அமைக்கவில்லை என்பதும் உச்சநீதிமன்றத்தின் கேள்வி.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழ்நாடு- கர்நாடகா இடையே ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே நீடித்து வரும் விவகாரம். இந்த பிரச்சனையில் காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையங்களின் உத்தரவுகளில் சிக்கல் எழுந்தால் உச்சநீதிமன்றத்தை நாடுவதும் நடைமுறையில் இருக்கிறது.

பெண்ணையாறு பிரச்சனை: இதேபோல தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யர்கோல் என்னும் இடத்தில் அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடகா அரசு மேற்கொண்டது. இதற்கு எதிராக தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தி 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
பெண்ணையாறு நடுவர் மன்றம்: இந்த வழக்கில் மத்திய அரசை அணுக வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனடிப்படையில் மத்திய அரசிடம் தென்பெண்ணை நடுவர் மன்றம் அமைக்க கோரியது தமிழ்நாடு அரசு. ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் போனது தமிழ்நாடு.
அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்: இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் கர்நாடகா தேர்தல் நடைபெறுகிறது என்பதால் அவகாசம் கேட்டது மத்திய அரசு. இதனை ஏற்று உச்சநீதிமன்றமும் அவகாசம் தந்தது.
மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்: இந்நிலையில் இன்று பெண்ணையாறு வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், பெண்ணையாறு பிரச்சனையில் கர்நாடகா அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கடிதம் அனுப்பி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க எத்தனையோ முறை அவகாசம் கொடுத்தும் ஏன் மத்திய அரசு அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது என கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் இன்னும் ஒரு வார காலத்தில் மத்திய அரசு தமது நிலைப்பாட்டை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications