தமிழக ஆளுநர் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது - பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசின் முடிவுகளை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான மோசமான முன்னுதாரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கிடப்பில் போட்ட ஆளுநர்
பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது?
அப்போது "தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்." என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், "விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன். ஏன் பேரறிவாளவனை நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது. பேரறிவாளனை விடுவிப்பதுதான் ஒரே தீர்வு" என்று தெரிவித்துள்ளனர்.

அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு பரிந்துரையையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவது ஏன் என கேள்வி எழுப்பியது. எல்லாவற்றையும் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்புவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான மோசமான முன்னுதாரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஆளுநரும் தமிழ்நாடு சட்டப்பேரவையும்
7 தமிழர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், இதனால் அவரை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்
அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியதுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தகவல் வெளியானது.

தீர்மானங்களை கிடப்பில் போடும் ரவி
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால் மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி. இந்த நிலையில் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் 2 நாட்கள் முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications