கொலீஜியம் பரிந்துரைத்த சிலரை மட்டும் நீதிபதிகளாக நியமிப்பது ஏன்? மத்திய அரசை வெளுத்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியலில் ஒரு சிலரை மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கும் மத்திய அரசின் போக்கு ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளது. இத்தகைய போக்கை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைத்து வருகிறது. மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைக்கும். இதன் மீது மத்திய அரசு முடிவெடுத்து நியமனம், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கம்.
ஆனால் கொலீஜியம் என்னதான் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தாலும் பெரும்பாலானவற்றின் மீது முடிவெடுக்கவில்லை; அல்லது நிராகரிக்கிறது என்பது உச்சநீதிமன்றத்தின் கவலை.
இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசுகுப் பிறப்பித்திருந்தது.
2021-ம் ஆண்டு இந்த வழக்கில் கொலீஜியத்தின் 70 பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. இதன் மீது மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பை கூட உச்சநீதிமன்றம் நிர்ணயித்திருந்தது. ஆனாலும் மத்திய அரசு தமது போக்கில் இருந்து மாறவில்லை.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலீஜியத்தின் பரிந்துரைகளில் சிலரை மட்டும் தேர்வு செய்து நீதிபதிகளாக மத்திய அரசு நியமித்து வருகிறது. இத்தகைய மத்திய அரசின் போக்கால் நீதித்துறையில் ஒழுங்கின்மை ஏற்படும். மத்திய அரசின் இப்போக்கு ஏற்புடையது அல்ல. மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கொலீஜியத்தின் பரிந்துரைகளை உடனே பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் காட்டமாக அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications