6 வாரம்.. அதற்குள் சரண்டர் ஆகனும்! வாச்சாத்தி குற்றவாளி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.
1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சந்தன மரக் கடத்தல் வழக்கில் வீரப்பனை தேடுவதற்காக வாச்சாத்தி மலை கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் என 250 க்கும் மேற்பட்டவர்கள் அந்த கிராமத்தையே சூரையாடியதாகவும், அங்கிருந்த பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வெளியான குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த வழக்கு சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 200 க்கும் மேற்பட்டவர்களைக் குற்றவாளிகள் என மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 215 பேர் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்தனர்.
அவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிறருக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவற்றை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்து உள்ளது. 215 பேரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம், அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய 3 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அத்துடன் அதிகாரிகள் வாச்சாத்தி மலை கிராமத்தில் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமையால் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் 18 பேருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அதில் சரி பாதி தொகையை குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் எனவும் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐ.எப்.எஸ் அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், குற்றவாளிகள் அனைவரும் 6 வாரத்திற்குள் சரணடைய உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications