கர்நாடகா: சொத்து குவிப்பு வழக்கில் டிகே சிவகுமாருக்கு சிக்கல்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தாக்கல் செய்த தம் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. இதனால் கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய காங்கிரஸ் முகங்களில் ஒருவர்தான் டிகே சிவகுமார். கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர். கர்நாடகா முதல்வர் பதவி கிடைக்காத போதும் இப்போதும் அதற்காக காய் நகர்த்தி வருகிறார் துணை முதல்வர் டிகே சிவகுமார்.

டிகே சிவகுமார் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது.
2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கர்நாடகா அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் டிகே சிவகுமார் என்பது வழக்கு.
தம் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவகுமார் மேல்முறையீடு செய்தார். அதேநேரத்தில் சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு தந்த அனுமதியை கர்நாடகா அரசு ரத்து செய்தது. கர்நாடகா அரசின் லோக் ஆயுக்தா இந்த வழக்கை நடத்தி வருகிறது.
டிகே சிவகுமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது டிகே சிவகுமார் தரப்புக்கு சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அத்துடன் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி டிகே சிவகுமாரின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர். முன்னதாக கடந்த மார்ச் மாதம், டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறையின் வழக்கை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமது மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவகுமார், சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரினோம். கர்நாடகா உயர்நீதிமன்றம் இதை நிராகரித்தது. இதனால் உச்சநீதிமன்றம் சென்றோம். தற்போது உச்சநீதிமன்றமும் எங்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவு என்னவோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.
மேலும் சொத்து குவிப்பு வழக்கு குறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த முடியாது. ஆனாலும் சிபிஐ விசாரணை நடத்துகிறது. நான் எந்த தவறுமே செய்யவில்லை என்பதால் கவலையும் இல்லை என்றார் டிகே சிவகுமார்.












Click it and Unblock the Notifications