வட்டிக்கு வட்டி கேட்பதா? மத்திய அரசு பதிலில் திருப்தியில்லை.. 1 வாரம் அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: ரூ.2 கோடி வரை பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன்களின் ஒத்திவைக்கப்பட்ட தவணைகள் மீது வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் திருப்திகரமாக இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் லாக்டவுன் காரணமாக, ஆறு மாத காலத்திற்கு (ஆகஸ்டு 31ம் தேதி வரை) கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், சிறு தொழில் கடன்கள், கல்விக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டு உபயோகக் கடன்கள், கடன் அட்டை மீதான நிலுவைத் தொகை ஆகியவற்றுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தொகைக்கு வட்டி கேட்டன வங்கிகள். இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இப்படி, வட்டிக்கு, வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.

வட்டிக்கு வட்டி
இந்த வழக்கு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்பட மாட்டாது, ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டி மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், மத்திய அரசின் முடிவை வரவேற்றனர்.

வங்கிகளுக்கு செலவீனம்
அதேநேரம், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் தரப்பில் ஆஜராகி வாதிட்ட, மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ஒவ்வொரு பிரிவிற்குமான கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ள நிதி அமைச்சகத்தின் மதிப்பீட்டால், வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி செலவாகும் என்று வாதிட்டார்.

திருப்தியில்லை
வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்ற அரைசின் அறிவிப்பில் சந்தேகம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய அரசின், பிரமாண பத்திரத்தில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஒரு வாரம் அவகாசம்
நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications