கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை ஏன் நியமிக்கவில்லை? மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 பேர் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் அல்லது நிராகரிக்கும்.
அண்மைகாலமாக உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் மாறுபாட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது மிகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது. மேலும் கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமலும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கவுல், ஓஎஸ் ஓகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி இருந்தார். அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பான நியமன உத்தரவுகளை பிறப்பிப்பதில் மத்திய அரசு தாமதிக்கிறது. இது மிக மிக முக்கியமான விவகாரம் என அதிருப்தி வெளியிட்டனர்.
நீதிபதிகள் நியமனம்.. தேர்வுக்குழுவில் அரசின் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும்! மத்திய அரசு பரபர கடிதம்
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்துக்காக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி உறுதியளித்தார்.
கொலீஜியம் குழுவானது கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிவி சஞ்சய்குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைத்திருந்தது.
ஆனால் இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 2 நீதிபதிகளையும் கொலீஜியம் பரிந்துரைத்தது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார், அலகாபாத் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோரை பரிந்துரைத்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் உள்ளனர். தற்போது 7 நீதிபதிகள் இடங்கள் காலியாக உள்ளன.