ஆர்டிகிள் 370 ரத்தை விமர்சிக்க.. மக்களுக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம் வழங்கிய நச் தீர்ப்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை விமர்சிப்பதோ, பாகிஸ்தானியர்களின் சுதந்திர தினத்தை வாழ்த்துவதோ கிரிமினல் குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மட்டுமல்லாது, ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தினத்தை, 'கருப்பு நாளாக' அனுசரித்து மகாராஷ்டிராவை சேர்ந்த பேராசிரியர் ஜாவேத் அகமது ஹஜா தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்திருந்தார். மேலும், ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான் சுதந்திர தினம் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் செய்திகளை வெளியிட்டிருந்தார்.

எனவே இவர் மீது 153A இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த மகாராஷ்டிரா காவல்துறை, அவரை கைது செய்தது. தனது கைதுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தை பேராசிரியர் நாடியிருந்தார். ஆனால், கைது நடவடிக்கையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, விமர்சனங்களை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என்று கூறி பேராசிரியர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.
மேலும், "இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்த நடவடிக்கைக்கு எதிராக விமர்சிக்க உரிமை உண்டு. ரத்து செய்யப்பட்ட நாளை 'கருப்பு தினம்' என்று விவரிப்பது எதிர்ப்பு மற்றும் வேதனையின் வெளிப்பாடாகும். அரசின் நடவடிக்கைகள் மீதான ஒவ்வொரு விமர்சனமும் அல்லது எதிர்ப்பும் 153-ஏ பிரிவின் கீழ் குற்றமாக கருதப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் இன்றியமையாத அம்சமான ஜனநாயகம் நிலைக்காது.
இந்த தீர்ப்பு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டின் முக்கியத்துவத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது, குடிமக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் மீது கருத்து வேறுபாடுகளை தெரிவிக்க உரிமை உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளை 'கறுப்பு நாள்' என்று சொல்வது, வெறுப்பைத் தூண்டும் முயற்சியாக இல்லாமல், 'எதிர்ப்பு மற்றும் வேதனையின்' வெளிப்பாடாக நீதிமன்றத்தால் பார்க்கப்படுகிறது" என்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications